ஆயுர்வேத வைத்தியர்களுக்கு அரச நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
வேலையற்ற பட்டதாரிகள் ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி அவர்களே பிரதமர் அவர்களே அனைத்து சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பை வழங்கு, ஆயுர்வேத வைத்தியர் குறைபாட்டினை உடனடியாக நிவர்த்தி செய், தேர்தல் வாக்குறுதி வெறும் பேச்சில் மட்டுமா?, பட்டதாரிகளின் பட்டம் வீட்டில் முடக்கப்படுமா?, இன்னும் எத்தனை காலம்தான் இழுத்தடிப்பு, சுதேச மருத்துவம் அரசுக்கு தேவையில்லையா, சேதனப் பசளையை ஊக்குவிக்கும் அரசு சுதேச மருத்துவத்தை நிராகரிப்பது ஏன்? போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.
போராட்டத்தின் பின்னர் வட மாகாண ஆளுநருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment