தமிழ் பேசும் கட்சிகளை அணி திரட்ட சம்பந்தன் தீர்மானம் ! சுமந்திரன் நாடு திரும்பியதும் நடவடிக்கை : தடம்மாறும் ரெலோவின் முயற்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

தமிழ் பேசும் கட்சிகளை அணி திரட்ட சம்பந்தன் தீர்மானம் ! சுமந்திரன் நாடு திரும்பியதும் நடவடிக்கை : தடம்மாறும் ரெலோவின் முயற்சி

(ஆர்.ராம்)

புதிய அரசியமைப்பு உருவாக்கச் செயற்பாட்டில் தமிழ் பேசும் மக்கள் அபிலாஷைகளை மையப்படுத்தி அதில் உள்ளீர்க்கப்பட அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தமிழ் பேசும் கட்சிகளை ஒரு தளத்தில் அணி திரட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார்.

அத்தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றில் வைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனும் அங்கு பிரசன்னமாகியிருந்துள்ளார்.

இவ்விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருகையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தீர்மானத்ததோடு, அந்தக் கடிதத்தினை இறுதி செய்வதற்காக கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றையும் நடத்தியிருந்தன.

இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இருப்பினும், இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் முக்கிய கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்கேற்றிருக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்த வரையில் கொள்கை அளவில் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை ஏற்றுக் கொள்வதற்கு தாம் தயாராக இல்லை என்று பகிரங்கமாக கூறியுள்ளது.

இந்நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்கக் கோரும் செயற்பாட்டில் தாங்கள் பங்கேற்க முடியாது என்பதையும் அக்கட்சி தர்க்க ரீதியாக நியாயப்படுத்தியுள்ளது.

இவ்வாறிருக்கையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா மேற்படி கட்சிகளின் ஒருங்கிணைவுச் செயற்பாட்டிற்கு ஆதரவை அளித்து வந்த நிலையில் அவருடைய கட்சியினரே அரசியல் பீடத்தில் குறித்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தொனிப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், சம்பந்தன் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஏது நிலைமைகள் இன்மையால் கூட்டத்தினை பிற்போடுமாறு மாவை ஏற்பாட்டாளர்களான ரெலோ மற்றும் புளொட்டிடம் கோரியுள்ளார்.

எனினும் ஏற்பாடுகள் பூர்த்தியாகி விட்டால் அக்கூட்டத்தினை பிற்போட முடியாது என்று பங்காளிகள் தெரித்து விட்டார்கள். இதனால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் குறித்த கட்சிகளின் ஒருங்கிணைவில் தமிழரசுக் கட்சியின் பங்கேற்பின் அவசியத்தினை வலியுறுத்தினார்கள்.

பின்னர் கொழும்பு திரும்பியதும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது சம்பந்தன் சாதகமான சமிக்கைஞயை வெளிப்படுத்தியுள்ளர்.

இந்தப் பின்னணியில், கடந்த பாராளுமன்ற அமர்வின்போது ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஆகியோரை சந்தித்த சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, புதிய அரசியலமைப்புக்கான வரவொன்று இந்த ஆண்டு இறுதிக்குள் வரவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே கூறியுள்ள நிலையில் அதுபற்றி விசேட கரிசனை கொள்ளப்பட வேண்டும் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

மேலும், இந்த விடயத்திற்காக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய சிறு, சிறுபான்மைக் கட்சிகள் ஆகியவற்றை அழைத்துப் பேசுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் சம்பந்தன் பங்காளிக் கட்சித் தலைவலர்களிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலை சுமந்திரன் அமெரிக்காவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியதும் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அரசியலமைப்பு விடயங்கள் பற்றி பேசப்படவுள்ளதால் அங்கு நடைபெறும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிடவும் தமிழ் பேசும் கட்சிகளையும் முற்போக்கு கட்சிகளையும் ஒருங்கிணத்து ஒரே மேடையில் அழைத்து கூட்டத்தினை நடத்துவதா இல்லை தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளுக்கு இடையில் முதல் கூட்டத்தினை நடத்திவிட்டு ஏனைய தரப்புக்களை அழைப்பதா என்பது தொடர்பிலும் சம்பந்தன் பங்காளிக் கட்சிகளுடன் ஆராய்ந்துள்ளார்.

முன்னதாக, 13 ஆவது திருத்தச் சட்டத்தினை மையப்படுத்தி ரெலோ, அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. தற்போது சம்பந்தன் அவ்விதமான நகர்வொன்றினை ஆரம்பிக்கவுள்ளதால் ரெலோவின் 13ஆவது திருத்தத்தினை மையப்படுத்திய நகர்வு புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியமாக தடம் மாறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment