புதிய வைரஸ் பிறழ்வில் சிறுவர்களே அதிகமாக பாதிப்பு : இலங்கையில் தொற்றுப் பரவலானது 15-20 வீதத்தால் அதிகரிப்பு : நிலைமை மோசமடைந்தால் இறுக்கமான தீர்மானங்கள் - மீண்டும் எச்சரிக்கும் சுகாதார தரப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

புதிய வைரஸ் பிறழ்வில் சிறுவர்களே அதிகமாக பாதிப்பு : இலங்கையில் தொற்றுப் பரவலானது 15-20 வீதத்தால் அதிகரிப்பு : நிலைமை மோசமடைந்தால் இறுக்கமான தீர்மானங்கள் - மீண்டும் எச்சரிக்கும் சுகாதார தரப்பு

(ஆர்.யசி)

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலானது 15-20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், நிலைமைகள் மோசமடையும் பட்சத்தில் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் சுகாதார தரப்பு மீண்டும் எச்சரிக்கை விடுக்கின்றது.

தற்போதைய புதிய வைரஸ் பிறழ்வு காரணமாக சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடளாவிய கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்த புதிய தரவுகள் தொடர்பிலும், அடுத்தகட்ட சவால்கள் குறித்தும் தெளிவுபடுத்தும் போதே அவர்கள் இதனை கூறினர்.

இது குறித்து சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்த்தன கூறுகையில், நாட்டில் மீண்டும் வேகமாக கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது, நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் செயற்பாடுகள் பொறுப்பற்ற விதத்தில் அமைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

அதேபோல் தடுப்பூசி ஏற்றி விட்டோம் என்ற எண்ணப்பாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறுகின்றமை அதிகமாக அவதானிக்கப்பட்டு வரும் ஒரு காரணியாகும்.

தடுப்பூசி ஏற்றினாலும், எத்தனை தடவை ஏற்றிக் கொண்டாலும் அவற்றை விடவும் வைரஸின் வீரியம் அதிகமானது என்பதையே நாம் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்துக் கொண்டுள்ளோம்.

நாம் தடுப்பூசி ஏற்றி விட்டோம் என்பதற்காக வைரஸ் தொற்று பரவாமல் இருக்கப் போவதில்லை. எமது செயற்பாடுகள் காரணமாக வைரஸ் காவிச் செல்லப்பட்டு ஏனையோருக்கு பரவும் சாத்தியப்பாடுகள் அதிகமாகும். எனவே பொதுமக்கள் மிகக்கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது வைரஸின்பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலைமை தொடருமாயின் மீண்டும் நாட்டை முடக்கும் நிலைமையே ஏற்படும். அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்படும். சம்பள கொடுப்பனவுகள் முதற்கொண்டு மட்டுப்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும். ஆகவே இதனை சகலரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்து காதார அமைச்சின் கொவிட் வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறுகையில், நாட்டில் கொவிட் வைரஸ் பரவலானது 15-20 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இறுதியாக கிடைக்கப் பெற்ற சுகாதார தரவுகளுக்கு அமைய யாழ்ப்பாணம், குருணாகல், அம்பாறை, பொலன்னறுவை, அநுராதபுரம், கம்பஹா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை உடனடியாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கைக்கான புதிய வைரஸ் பிறள்வு கண்டறியப்பட்டுள்ளது.

இது (B1.617.2ay.104) என அடையாளப்படுத்தப்படுவதுடன் இதன் பரவல் வேகமும் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிக கவனமாக தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment