ரோஹித ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்கினால் நானும் எதிர்த்துப் போட்டியிடத் தயார் : 'பன்டோரா பேப்பர்ஸ்' தொடர்பில் அமைதிகாக்கும் ஊடகங்கள் ஐ.ம.ச. பிளவுபடப் போவதாக பொய் பிரச்சாரம் - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

ரோஹித ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்கினால் நானும் எதிர்த்துப் போட்டியிடத் தயார் : 'பன்டோரா பேப்பர்ஸ்' தொடர்பில் அமைதிகாக்கும் ஊடகங்கள் ஐ.ம.ச. பிளவுபடப் போவதாக பொய் பிரச்சாரம் - நளின் பண்டார

(நா.தனுஜா)

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ரோஹித ராஜபக்ஷ களமிறங்கும் பட்சத்தில் நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன். ஏனெனில் ரோஹித ராஜபக்ஷவின் கருத்தின்படி, அவர் கணித பாடப் பேராசிரியராவார். நான் கணித பாடம் தொடர்பான கலாநிதியாவேன். அவர் அனுப்பிய ரொக்கெட்டுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் உருவாக்கிய சிறியளவிலான மின்னுற்பத்தி நிலையங்கள் இன்னமும் நன்கு இயங்குகின்றன. அதுமாத்திரமன்றி அவருக்கு வடமேல் மாகாணம் தொடர்பில் தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. ஆனால் நான் அப்பகுதி தொடர்பில் நன்கறிவேன். எனவே அவருக்கெதிராக வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் களமிறங்குவதற்கான சகல தகுதிகளும் எனக்கு உள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, தற்போது சர்வதேச ரீதியில் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கின்ற 'பன்டோரா பேப்பர்ஸ்' எனப்படுகின்ற ஆவணத்தில் இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியிருக்கின்றது. அவர் முறைகேடான விதத்தில் சுமார் 35 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைத் திரட்டியிருப்பதாக அந்த ஆவணத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மை தொடர்பில் நிரூபமா ராஜபக்ஷவிடமும் அவரது கணவரான திருக்குமார் நடேசனிடமும் குறித்த ஊடகவியலாளர் அமைப்பு கடிதம் மூலம் கேள்வி எழுப்பியிருக்கின்றது. இருப்பினும் அதற்கு உரியவாறு பதில் வழங்கப்பட்டமை தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பன்டோரா ஆவணம் வெளியானதன் பின்னர் ஏனைய உலக நாடுகள் செயற்பட்ட விதத்தைப் பார்த்தோம். பாகிஸ்தான் அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளின் பெயர்களும் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து உடனடியாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.

ஆனால் இவ்விடயம் தொடர்பில் எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இன்னமும் எதனையும் கூறவில்லை. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவிருக்கின்றோம். எனினும் அது குறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுக்கின்ற அதிகாரம் அரசாங்கத்திடமே காணப்படுகின்றது.

அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் அமைதிகாக்கின்ற ஊடகங்கள், ஐக்கிய மக்கள் சக்தி ஐந்தாகப் பிளவுபடப் போகின்றது என்று பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன. உண்மையில் எதிர்க்கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் இல்லை. ஆனால் எமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக சில வெளியகத் தரப்பினர் பொய்யாகக் காண்பிக்க முற்படுகின்றனர்.

இன்றளவில் கொவிட்-19 தடுப்பூசியின் ஊடாக பெருமளவு இலாபத்தை உழைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கும்போது, சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான எதிர்க்கட்சி நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிவருகின்றது.

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கையாள்வதில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற தீர்மானங்களின் விளைவாகவே இன்றளவில் 13,000 இற்கும் அதிகமான உயிர்கள் தொற்றுக்குப் பலியாகியுள்ளன. அரசாங்கம் அவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் கூறப்போகின்றது?

அடுத்ததாக அரசாங்கம் சீனாவிலிருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்தது. ஆனால் அதில் தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் காணப்பட்டமையினால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலையேற்பட்டது. தற்போது இந்தியாவிலிருந்து உரத்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இறக்குமதி செய்யப்படும் உரத்தில் தீங்கேற்படுத்தும் கூறுகள் உள்ளடங்கியிருத்தல் என்பது மிகப்பாரதூரமான விடயமாகும். அது குறித்து உரியவாறான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் எமது நாட்டில் உள்ளனவா?

உரப் பற்றாக்குறையின் காரணமாக விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை உற்பத்திகள் வீழ்ச்சியடையும் பட்சத்தில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அதுமாத்திரமன்றி உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.

மறுபுறம் நாட்டின் வலுசக்தி உற்பத்தியைக் கையாளும் அதிகாரம் வெளிநாடொன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய நடவடிக்கைகளினால் எதிர்வரும் காலங்களில் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று குறிப்பிட்டார்.

கேள்வி - மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வடமேல் மாகாண சபைக்கான போட்டி தீவிரமானதாக இருக்கின்றது. ஒருபுறம் ரோஹித ராஜபக்ஷவும் மறுபுறம் தயாசிறி ஜயசேகரவும் போட்டியிடும் நிலையில், உங்களுடைய தரப்பிலிருந்து நீங்கள் களமிறங்குவீர்களா?

பதில் - ரோஹித ராஜபக்ஷ களமிறங்கும் பட்சத்தில் நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன். ஏனெனில் ரோஹித ராஜபக்ஷவின் கருத்தின்படி, அவர் கணிதபாடப் பேராசிரியராவார். ஆனால் அந்தப் பட்டத்தை எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை.

நான் கணித பாடம் தொடர்பான கலாநிதியாவேன். அவர் அனுப்பிய ரொக்கெட்டுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் உருவாக்கிய சிறியளவிலான மின்னுற்பத்தி நிலையங்கள் இன்னமும் நன்கு இயங்குகின்றன.

அதுமாத்திரமன்றி அவருக்கு வடமேல் மாகாணம் தொடர்பில் தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. ஆனால் நான் அப்பகுதி தொடர்பில் நன்கறிவேன். எனவே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment