அதிபர், ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு சமுகமளிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும், மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலவாக்கலை, லிந்துலை - ராணிவத்தை வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களும், அவர்களின் பெற்றோருமே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று திறக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன்படி பாடசாலையை திறப்பதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுமே போராடுவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கையில், 'ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும். அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைகள், போராட்டமின்றி தீர்க்கப்படவேண்டும் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment