ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை அரசாங்கத்தின் ஒரு சில உறுப்பினர்களே தீவிரப்படுத்தினர் - சந்திம வீரக்கொடி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 21, 2021

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை அரசாங்கத்தின் ஒரு சில உறுப்பினர்களே தீவிரப்படுத்தினர் - சந்திம வீரக்கொடி

இராஜதுரை ஹஷான்

பலவந்தமான முறையில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர முடியாது. தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே ஆசிரியர், அதிபர் சேவைக்கு குறைந்தளவு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் ஒரு சில உறுப்பினர்களது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறந்து கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது. சுமார் 24 வருட காலமாக சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தீர்வு காண முயற்சித்த போதும், அம் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை ஆளும் தரப்பில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள்தான் தீவிரப்படுத்தினார்கள்.

ஆசிரியர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை குறிப்பிட்டு ஆசிரியர், அதிபர்களுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.

தற்போதும் தேவையற்ற கருத்துக்களை அரசியல் அனுபவமில்லாத பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment