ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் : போராட்டம் தொடரும் என்கிறார் ஜோசப் ஸ்டாலின் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் : போராட்டம் தொடரும் என்கிறார் ஜோசப் ஸ்டாலின்

(இராஜதுரை ஹஷான்)

மாணவர் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தின் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் ஆசிரியர் சங்கத்தின் செயலர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும்குறிப்பிட்டதாவது, சம்பள பிரச்சினைக்கு தீர்வு, ஆசிரியர் அதிபர் சேவையை அத்தியாவசிய சேவையாக்குமாறு கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கத்தினர் சுமார் 84 நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

1997 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர், அதிபர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடமிருந்து மேலதிகமாக எதனையும் நாம் கோரவில்லை. கடந்த 24 வருட காலமாக இழக்கப்பட்டுள்ள உரிமைகளை மீண்டும் கோருகிறோம்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட சுபோதினி குழுவின் அறிக்கையை முழுமையாக செயற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம். சுபோதினி குழுவின் அறிக்கை தொழிற்சங்கத்தினருக்கு திருப்திகரமான உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.

சுபோதினி குழு அறிக்கையை செயற்படுத்துவதை விடுத்து அரசாங்கம் அமைச்சரவை உப குழுவை நியமித்தது. இக்குழுவினர் முன்வைத்த அறிக்கையின் தீர்வு 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை அடியொற்றியதாக காணப்படுகிறது. இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பள உயர்வை கட்டம்கட்டமாக அதிகரிப்பது நம்பத்தகுந்த விடயமல்ல.

எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் ஆசிரியர், அதிபர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள். தீர்வு கிடைக்கம் வரை போராட்டம் தொடரும் என்றார்.

No comments:

Post a Comment