இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் செயல்படும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ். அழகிரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ''முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு 1991ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது.
இந்தியாவை பொருத்தவரை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை 2019ம் ஆண்டிலிருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவு படுத்துகின்ற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.
இத்தகைய கூட்டங்களில் வன்முறையை தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போக்கிலும் அவர் பேசி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் பகுதியில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழ் நாட்டிலிருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
இவர் ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்து இருக்கிறார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் முறையிலும் செயல்பட்டு வருகின்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இத்தகைய சீர்குலைவு சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவில்லை எனில் அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
இந்தப் போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.'' என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment