(இராஜதுரை ஹஷான்)
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது திருப்தியற்றதாகவுள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் பால்மா தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும். ஆனால் தற்போது நீக்கப்பட்டுள்ள பால்மாவிற்கான இறக்குமதி வரி நிதியமைச்சினால் மீண்டும் அறவிடப்பட்டால் அதன் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும் என்று பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தையில் பால்மாவின் விற்பனை விலை அதிரிக்கப்பட்டதை தொடர்ந்து இறக்கமதி செய்யப்படும் பால்மாவின் விலையை தேசிய மட்டத்தில் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இருப்பினும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பால்மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து விற்பனை விலையை தீர்மானிக்கும் அதிகாரம் இறக்குமதியாளர் சங்கத்தினருக்கு உண்டு.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 350 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலையை 140 ரூபாவினாலும் அதிகரிக்க கோரிக்கை விடுத்தோம்.
இவ்விடயம் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் வெள்ளியன்று பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.
இதன்போது ஒரு கிலோ கிராம் பால்மாவினை 250 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவை 100 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இந்த விலை அதிகரிப்பும் திருப்தியற்றதாக உள்ளது. புதிய விலைக்கு அமைய ஒரு கிலோ கிராம் பால்மாவை விற்பனை செய்யும் போது 80 ரூபாவினாலும்,400 கிராம் பால்மாவை விற்பனை செய்யும் போது 32 ரூபாவினாலும் நஷ்டமடைகிறோம்.
பால்மாவிற்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டே பால்மாவின் விலை அதிகரிப்பை 140 ரூபாவினால் குறைத்துள்ளோம்.
விலையேற்றத்தை தொடர்ந்து மீண்டும் வரி அறவிடப்பட்டால் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும். திங்கள் முதல் சந்தையில் பால்மா தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கப்படும்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய விலைக்கு அமையவே அனைத்து விற்பனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment