(இராஜதுரை ஹஷான்)
எரிபொருளின் விலையை அதிகரித்தால் அரசாங்கத்தின் அனுமதியின்றி பேருந்து கட்டணத்தையும் அதிகரிப்போம். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது அவசியமாகும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறான நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறது. எவ்வாறாயினும் அரசாங்கம் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
எரிபொருள்விலை அதிகரிக்கப்பட்டால் அரசாங்கத்தின் அனுமதியின்றி பேருந்து கட்டணத்தை அதிகரிப்போம். ஏனெனில் அரசாங்கம் இதுவரையில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்கவில்லை. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சேவையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த ஜனவரி மாதம் 20 சதவீதத்தினால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் அது போதுமானதாக அமையாது. தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு அமைய பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது அவசியமாகும் என்றார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெறும். கடந்த ஜூன் மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இருப்பினும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால் அதன் சுமையை பேருந்து உரிமையாளர்கள் மீது சுமத்த முடியாது. எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
பேருந்து உரிமையாளர்களும், பொது பயணிகளும் பாதிக்கப்படாத வகையில் ஒரு தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்அமுனுகம தெரிவித்தார்.
No comments:
Post a Comment