(இராஜதுரை ஹஷான்)
வெள்ளைப்பூடு, சீனி, தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்களுடனான மோசடியை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை மூடி மறைக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் பிணைமுறி மோசடியாளர்களை தண்டிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கம் இரண்டாண்டுகள் கடந்தும் எவரையும் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். பெரும்போக விவசாய நடவடிக்கை தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
சேதனப் பசளை என்று குறிப்பிட்டுக் கொண்டு இரசாயன உரம் இறக்குமதி செய்வதும், இலங்கையின் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நுண்ணங்கிகள் உள்ளடங்கிய சேதனப் பசளை இறக்குமதி செய்வதும் அரசாங்கத்தின் செயற்பாடாக காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ-நைட்றஜன் திரவ உர இறக்குமதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. சேதன உரப் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
ஆகவே இந்தியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் ஊடாக உயர்தரத்திலான திரவ உரத்தை இறக்குமதி செய்வது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 15ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இந்த அமைச்சரவை பத்திரத்திற்கான அனுமதி கடந்த 19 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்திய நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளும் நனோ-நைட்றஜன் திரவ உரத்தை கொழும்பு, கொமர்ஷல் உர நிறுவனத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான நிதி மத்திய வங்கியின் திறைச்சேரி ஊடாக குறித்த தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
ஆனால் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய கொடுக்கல் வாங்கல் இடம்பெறவில்லை. நிதி ஒரு தனியார் வங்கி வைப்பின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது. இதில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளபோது அரசாங்கத்தின் ஆதரவுடன் வெள்ளைப்பூடு மோசடி, சீனி மோசடி,தேங்காய் எண்ணெய் மோசடி என பலத்தரப்பட்ட மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இம்மோசடிகள் தொடர்பில் உண்மை விவரங்களை அரசாங்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்தவில்லை. அதுபோலவே திரவ உர இறக்குமதி மோசடியும் மறக்கடிக்கப்படும். சிறுசிறு மோசடிகளினால் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மறக்கடிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றவாளிகளை தண்டிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது பிணைமுறி விவகாரத்தை மறந்து விட்டார்கள். ஆகவே நாட்டு மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து இனிவரும் காலங்களிலாவது தெளிவுபெற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment