(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்று குறைவடைந்து வருகின்ற போதிலும், மறுபுறம் டெங்கு பரவல் அதிகரித்து வருதாகவும், எனவே பொதுமக்கள் தமது சுற்றாடலை தூய்மையைப் பேணுவதோடு மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளுக்கமைய இவ்வாண்டில் இம்மாதம் முதலாம் வாரம் வரையில் 20811 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் 688 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் 10 மாதங்களில் 20 இற்கும் அதிக டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், கடந்த ஆண்டு முழுவதிலும் 34411 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு வாரமொன்றுக்கு சுமார் 269 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நீடித்தால் நிச்சயமாக வைத்தியரை நாடுமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment