ஆசிரியர் தினத்தில் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை மேற்கொள்வோம் : முடிந்தால் சரத் வீரசேகரவை தடுத்து நிறுத்துமாறு சவால் விடுத்தார் ஜோசப் ஸ்டாலின் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

ஆசிரியர் தினத்தில் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை மேற்கொள்வோம் : முடிந்தால் சரத் வீரசேகரவை தடுத்து நிறுத்துமாறு சவால் விடுத்தார் ஜோசப் ஸ்டாலின்

(எம்.ஆர்.எம்.வசீம்)

அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு முறையான தீர்வு வழங்குமாறு கோரி எதிர்வரும் ஆசிரியர் தினத்தில் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை மேற்கொள்வோம். அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு முடிந்தால் தடுத்து நிறுத்தட்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

போராட்டம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கும் கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு அரசாங்கத்துக்கு தெரிவித்து 84 நாட்களாகின்றன. இதுவரை எந்த தீர்வையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. அதனால் எதிர்வரும் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினத்தில் பாரிய போராட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம்.

நாட்டில் இருக்கும் 312 கோட்டக் கல்வி காரியாலயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

அத்துடன் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்ததாக மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதாகும். நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக தற்போது திகதி நிர்ணயிக்கப்படுகின்றது. அனைத்து ஆரம்ப பாடசாலைகளையும் இந்த மாதம் ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் பாடசாலைகளை ஆரம்பித்தாலும் மாணவர்களுக்கு கற்பிக்க அதிபர், ஆசிரியர்கள் தேவை. அதனால் அவர்களை பாடசாலைக்கு அழைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாகவும், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன் மூலமே தீர்மானம் ஒன்றுக்கு வரலாம்.

அத்துடன் போராட்டம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கின்றார். அச்சுறுத்தி எங்களை அடக்க முடியாது. அதற்கு நாங்கள் அச்சப்படப் போவதில்லை.

அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸுக்கு பொறுப்பாக இருக்கலாம். அதற்காக அவருக்கு தேவையான முறையில் பொலிஸாரை செயற்படுத்த முடியாது. அதனால் நாங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஆசிரியர் தினத்தில் பாரிய போராட்டங்களை மேற்கொள்வோம். முடிந்தால் எங்களை தடுத்து நிறுத்தட்டும் என்றார்.

No comments:

Post a Comment