கொரோனா நீண்ட விடுமுறையின் பின்பு, கிழக்கில் இன்று (21) வியாழக்கிழமை 568 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இன்று அதிபர் யாராவது லீவு அறிவித்தால், அவர் பாடசாலைத் திறப்பையும் ஆவணங்களையும் அந்தந்த வலயக் கல்விப் பணிமனையில் ஒப்படைக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அறிவித்துள்ளார்.
நேற்று, அவர் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள அவசர அறிவுறுத்தல் கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு ஒப்படைக்கப்படும் திறப்பும், ஆவணங்களும் குறித்த பாடசாலையின் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளரிடம் (PSI Coordinator) கையளிக்கப்பட்டு, கோட்டக் கல்விப் பணிப்பாளர் (D.E.O) பாடசாலை இன்று மீளத் திறப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப வகுப்புக்களைக் கொண்ட 568 பாடசாலைகள் இன்று மீளத் திறக்கப்படவிருக்கின்றன.
அதிபர் சமுகமளிக்காத பாடசாலைகளை, அந்தந்த பாடசாலைப் பொறுப்பு மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர்கள் திறந்து மாணவர்களுக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இதுபற்றிய குறிப்பை பாடசாலையின் சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் (LogBook) கோட்டக் கல்வி அதிகாரி முன்னிலையில் இணைப்பாளர் முறைப்படி பதிய வேண்டும்.
அதிபர் திரும்பும் வரை, குறித்த இணைப்பாளர் அந்தந்த பாடசாலையின் பாடசாலை அபிவருத்திக் குழுவினர், சுகாதாரக் குழுவினர் மற்றும் பாடசாலை கட்டாயக் கல்விக் குழுவினரோடு கலந்துரையாடி பாடசாலை நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும்.
பட்டதாரி பயிலுனர்களை பாடசாலையில் இணைத்து ஆசிரியர்கள் சகல வகுப்புகளிலும் இருக்கத் தக்கவாறு நடவடிக்கைகளை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
No comments:
Post a Comment