பவானிபூர் இடைத் தேர்தல் - வெற்றி பெற்றார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

பவானிபூர் இடைத் தேர்தல் - வெற்றி பெற்றார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பவானிபூர் இடைத் தேர்தலில் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். 

இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

தேர்தல் ஆணையக விதிகள்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவிகளில் இல்லாதவர்களும் முதலமைச்சராக அல்லது அமைச்சராக பதவி ஏற்கலாம். ஆனால் அவர்கள் 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும்.

அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5ஆம் திகதிக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இடைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.

அவரது பாரம்பரிய தொகுதியான பவானிபூர் தொகுதியில் சோபன் தேவ் சட்டோபாத்யாயா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அவர் மம்தா பானர்ஜிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பெண் சட்டத்தரணி  பிரியங்கா டிப்ரிவாலை பாரதிய ஜனதா வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் நிறுத்தப்பட்டார். அவர்கள் தவிர மேலும் 9 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

இதில் மம்தா பானர்ஜிக்கும், பிரியங்கா டிப்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த மாதம் 30ஆம் திகதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது. 57 சதவீதம் வாக்கு  பதிவாகி இருந்தது.

பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்தார்.

மம்தா பானர்ஜி முதல் சுற்றில் 5,333 வாக்குகளும், பிரியங்கா டிப்ரிவால் 2,956 வாக்குகளும் பெற்றிருந்தனர். மம்தா பானர்ஜி 2,377 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.

2ஆவது சுற்றில் 14,284 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜிக்கு 9,974 வாக்குகளும், பிரியாவுக்கு 3,828 வாக்குகளும் கிடைத்து இருந்தன. 2ஆவது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 6,146 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.

3ஆவது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 9,974 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 11ஆவது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி, சுமார் 34 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.

20ஆவது சுற்றில் பாஜகவின் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் பவானிபூர் இடைத் தேர்தலில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment