வியாபாரிகளின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

வியாபாரிகளின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது - பந்துல குணவர்தன

(ஆர்.யசி)

நாட்டின் அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி கொள்கைகளை வகுத்தாலும் கூட, வியாபாரிகளின் செயற்பாடுகள் காரணமாக கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாகவும், அரிசி நெருக்கடி தீரும் வரையில் அரிசி இறக்குமதி செய்யப்படும் எனவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கும் என்ற மக்களின்  அச்சத்தின் மத்தியில், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் குறித்து நாட்டின் நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தகத்துறை அமைச்சர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது நெருக்கடி நிலையொன்று உள்ளதென்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு இல்லை ஆனால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. விலை குறைப்பை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சித்த சகல நேரங்களிலும் அரசாங்கத்தை விமர்சிக்கும், அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகள் இடம்பெற்றன. இன்றும் அவ்வாறான நிலையே உள்ளது. 

விலை தீர்மானம், வர்த்தமானி அறிவித்தல் விடுதல் உள்ளிட்ட சகல அதிகாரமும் நுகர்வோர் அதிகார சபையின் கடமையாகும். அமைச்சராக என்னால் இதில் ஒன்றுமே செய்ய முடித்த நிலை உள்ளது.

இறக்குமதியை நிறுத்தும், வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி முயற்சித்த வேளையில் அதற்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடி தூக்குகின்றனர். இது நாட்டில் நெருக்கடி நிலைமைகளை உருவாக்குகின்றது. 

ஒரே நேரத்தில் சகல இறக்குமதிகளையும் எம்மால் நிறுத்த முடியாது, ஆகவே அத்தியாவசிய பொருட்களை நாம் இறக்குமதி செய்தே ஆக வேண்டியுள்ளது. குறிப்பாக அரிசி நெருக்கடி தீர்வும் வரையில் நாம் அரிசி இறக்குமதி செய்வோம்.

அரசாங்கம் எடுத்த கொள்கைக்கு முரணாக இப்போது தீர்மானம் எடுக்க நேர்ந்துள்ளது, இறக்குமதியை நிறுத்துவதே ஜனாதிபதியின் கொள்கை என்பதை தெரிவித்தாலும் கூட அதனை யதார்த்தமாக்க முடியாதுள்ளது, அதற்கு வியாபாரிகளே காரணம். மக்களின் பிரச்சினையா அரசாங்கத்தின் கொள்கையா என்ற நிலை வரும் வேளையில் மக்களின் பிரச்சினைகளையே நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

அதுமட்டுமல்ல இப்போது எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டியதன் தேவை குறித்து அமைச்சர் கம்மன்பில அமைச்சரவையில் தெளிவுபடுத்தினார்.

உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் எம்மால் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கினால் ஒரு கட்டத்துடன் எம்மால் தாக்கு பிடிக்க முடியாத நிலையொன்று உருவாகும், சலுகைகளை கொடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் பொருளாதாரம் வெடித்து சிதறிவிடும். அவ்வாறான நிலையை நோக்கி இலங்கை பயணித்துக் கொண்டுள்ளது. ஒரு சில சந்தர்ப்பங்களில் எம்மால் விலையை நிர்ணயிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment