நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான உள்ளக விமான சேவையை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த உள்ளூர் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பணிப்புரைக்கமைய அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு தனிமைப்படுத்தலுக்காக மூடப்படுவதற்கு முன்னர் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு தடவைகள் விமான சேவைகள் இடம்பெற்றன. அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனஅதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment