(இராஜதுரை ஹஷான்)
பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர், அதிபர்களுக்கான நவம்பர் மாத சம்பளத்தை இடை நிறுத்தவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்கடும் கல்வி அமைச்சு தீர்மானிக்கவில்லை. அதற்கான ஆலோசனைகளை ஜனாதிபதியும், பிரதமரும் வழங்கவில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை கல்வி செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்கும் செயற்திட்டம் 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனாலும், பாடசாலைக்கு அருகில் பெரும்பாலான மாணவர்கள் வசிப்பதனாலும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் உள்ள பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டது. ஆகவே அவரசபடத் தேவையில்லை. ஆசிரியர்கள் அனைவரும் நிச்சயம் எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைக்கு சமூகமளிப்பார்கள்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய பாடசாலைகள் நேற்று திறக்கப்பட்டன. எமது எதிர்பார்ப்பின் அடிப்படையில் பெரும்பாலான ஆசிரியர்களும், மாணவர்களும் பாடசாலைக்கு சமுகளமித்திருந்தார்கள். கொவிட் தாக்க சவால்களுக்கு மத்தியில் பாடசாலை கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது அவசியமாகும்.
நேற்று, இன்றும் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத சம்பளத்தை இடைநிறுத்தவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்கவும் கல்வி அமைச்சு தீர்மானிக்கவில்லை. அதற்கான ஆலோசனையினையும் ஜனாதிபதி, பிரதமர் வழங்கவில்லை.
தற்போது தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் பெரும்பாலான தொழிற்சங்கத்தில் உள்ள ஆசிரியர், அதிபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமுகளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு அனைத்து தொழிற்சங்கத்தினரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி துறைக்கும், பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் அதிகளவான நிதி ஒதுக்கப்படும்.
இவ்வருடம் தேசிய பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி விசேட கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு அதிக நேரத்தை ஒதுக்குதல், பாடத்திட்டத்தை விரைவாக பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவை இனிவரும் நாட்களில் செயற்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment