தனியார் சட்டத்தரணிகளை கொண்டு புதிய அரசியல் அமைப்பை வரைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சி : லக்ஸ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, October 21, 2021

தனியார் சட்டத்தரணிகளை கொண்டு புதிய அரசியல் அமைப்பை வரைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சி : லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் புதிய அரசியல் அமைப்புக்கான வரைபை கொண்டுவந்து சகல எதிர்க்கட்சிகளினதும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்களினதும் சுயாதீனத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே இலங்கையை சர்வதேசத்திடம் கொண்டுசெல்ல ஏதுவாக அமையும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21), இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் 214 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 840 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சட்ட ஒழுங்கு நாளுக்குநாள் மழுங்கிக் கொண்டே போகின்றது என்பது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஒரு எண்ணப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் எம்மை சந்தித்த வேளையில் நாம் கூற முன்னர் அவர்களே இந்த நிலைமைகளை எமக்கு கூறிவிட்டனர்.

குறிப்பாக 19 ஆம் திருத்தத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றியை புதிய அரசாங்கம் நாசமாக்கி வருவதாக கூறினர், குறிப்பாக சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடுகள் ஏற்பட்டுள்ளது.

சந்திரிக்கா காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கினர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார்.

நாம் ஆட்சிக்கு வந்து மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கினோம். ஆனால் புதிய அரசாங்கம் மீண்டும் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து சகல சுயாதீன ஆணைக்குழுக்களையும் நாசமாக்கி நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

இன்று நாட்டில் குற்றவாளிகள் சகலரும் விடுதலையாகிக் கொண்டுள்ளனர். இவற்றை தடுக்க வேண்டும். நீதி அமைச்சர் இந்த விடயங்களில் தலையிட்டு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

நாட்டில் நீதிப் பொறிமுறை, நியாயப்பாடுகள் நாளுக்குநாள் அழிக்கப்படுகின்றது என்ற எண்ணப்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் உருவாகியுள்ளது.

நாட்டில் அவசர அவசரமாக சட்டம் இயற்றப்படுகின்றது. இவ்வாறான நிலையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்டத்தரணிகளை கொண்டு இந்த அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமாகவே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தனியார் சட்டத்தரணிகளை கொண்டு புதிய அரசியல் அமைப்பை வரைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் அவ்வாறு இடம்பெறக் கூடாது. பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இதனை கொண்டுவந்து எம்மிடம் ஆலோசனை கேட்டு உருவாக்க வேண்டும்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் வேளையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களின் உரிமைகள் பலப்படுத்தாது போனால் அரசாங்கம் சர்வதேசத்திடம் செல்ல முடியாது. ஆகவே இதனை கருத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்ற சுயாதீனம் மற்றும் உயரிய சபைகளின் சுயாதீனத்தை பலப்படுத்த நீதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது இவர்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருகின்றனர். ஆனால் அதனை நாம் பார்க்கவே இல்லை. நகைப்புக்குரிய விடயங்களை முன்னெடுக்காது பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இவற்றை கொண்டுவந்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை கருத்துக்களை பெற்றுக் கொண்டு ஆரோக்கியமானதும், சர்வதேசம் இலங்கையை அங்கீகரிக்கும் விதமாக சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment