ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களையும் உட்புகுத்த இடமளியேன் : எனது பெயரை மக்களின் மனங்களில் நிலைத்து நிற்க உதவிய ஊடகங்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் நன்றி - யாழ்.மாநகர முதல்வர் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 2, 2021

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களையும் உட்புகுத்த இடமளியேன் : எனது பெயரை மக்களின் மனங்களில் நிலைத்து நிற்க உதவிய ஊடகங்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் நன்றி - யாழ்.மாநகர முதல்வர்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை. நான் முதல்வராக இருக்கும் வரை குளத்தில் எந்தவொரு மதத்தையும் பிரதிபலிக்க இடமளிக்கப்பட மாட்டாது என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி. மணிவண்ணன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரிய குளம் மத்தியில் இந்து, பௌத்த பீடம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் நன்றிகள். செய்திகளில், தொடர்ச்சியாக என்னைப்பற்றி எழுதி எனது பெயரை மக்களின் மனங்களில் நிலைத்து நிற்க உதவியுள்ளீர்கள்.

பத்திரிகையாளர்களிடமும், சமூக வலைத்தள எழுத்தாளர்களிடமும் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். உங்களுடைய எழுத்துக்கள் பிரதேச மக்களுடைய அபிவிருத்தியை பாதிக்காததாக இருக்க வேண்டும்.

என்னுடைய நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தால் அதனை நான் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் என் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் மக்களுக்கு கிடைக்கக் கூடிய அபிவிருத்தியோடு தொடர்புபடுத்தி எழுதாதீர்கள்.

இது தொடர்பில் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் அச்சப்படும் வகையில் போலியான தகவல்களை பரப்புவதை தவிர்குமாறு ஊடகம் மற்றும் சமூக வலைத்தள எழுத்தாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

விகாராதிபதியால் அனுப்பப்பட்ட கடிதத்தில் புத்தர் சிலை பற்றி எதுவும் கூறவில்லை. மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது பற்றியே கூறப்பட்டிருக்கிறது. மத நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்க கோரிய கடிதம் தொடர்பில் அடுத்த சபையில் இது தொடர்பில் ஆராயப்படும்.

ஆரிய குளம் மத சார்பற்றதாக இருக்கும். இந்த கடிதக் கோரிக்கைக்கு இணங்க வேண்டாம் என அடுத்த சபை அமர்விலே நான் தனிப்பட்ட ரீதியில் உறுப்பினர்களிடம் கோருவேன்.

இப்போது ஆரிய குளம் பகுதியில் முதலாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. முதலாம் கட்டமாக நடைபாதை மற்றும் குளத்தைச் சுற்றி இரும்பு வேலியடைத்தல் என்பன இடம்பெறும். இரண்டாம் கட்ட பணிகளுக்குரிய நிதிகளை நன்கொடையாளர்கள் தர முன்வந்தால் அபிவிருத்திப் பணிகள் தொடரும்.

இப்போது ஆரிய குளம் பற்றி முகநூலில் எழுதுபவர்கள் நாவற்குழியில் விகாரை கட்டப்பட்ட போது எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை.

டிசம்பருக்கு பின்னர் நாங்கள் அதிகாரத்தில் இருக்க மாட்டோம். அப்போது வேறு ஒரு தரப்பு அதிகாரத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டால் அதனை சமூக ஆவலர்களே தடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கேசரி

No comments:

Post a Comment