விலைகளை அதிகரித்தேனும் மக்களுக்கு பொருட்களை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றோம் : இங்கு இருக்கும் அனைவரையும் விட நிதி அமைச்சரின் மூளை பலமானது - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

விலைகளை அதிகரித்தேனும் மக்களுக்கு பொருட்களை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றோம் : இங்கு இருக்கும் அனைவரையும் விட நிதி அமைச்சரின் மூளை பலமானது - ரோஹித அபேகுணவர்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள மக்களை வரிசையில் நிற்க வைக்க அரசாங்கம் தயாரில்லை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்தேனும் மக்களுக்கு பொருட்களை கொடுக்கவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நிதி அமைச்சர் இம்முறை கொண்டுவரும் வரவு செலவு திட்டம் வெற்றிகரமான வரவு செலவு திட்டமாக அமையும். உலகில் மிகவும் சிறந்த, அதிஷ்டமான நாடாக மாறும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்ற வேளையில் அதில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்க வேண்டும், அதற்கான முயற்சிகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். பால்மா விலை அதிகரித்துள்ளது என்றால், எரிவாயு விலை அதிகரித்துள்ளது என்பது நன்றாக தெரியுமென்றால் என்ன செய்ய வேண்டும். எரிவாயுவிற்காக நீண்ட வரிசை ஒன்றினை உருவாக்க வேண்டுமா அல்லது விலை அதிகரித்தேனும் மக்களுக்கு பொருட்களை கொடுப்பதா? இந்த இரண்டில் எந்த தெரிவை நாம் முன்னெடுப்பது. அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள மக்களை வரிசையில் நிற்க வைக்க நாம் தயாரில்லை, ஆனால் எதிர்க்கட்சியினருக்கு மக்களை வரிசையில் நிக்கவைக்கவே விருப்பமாக உள்ளது.

அவ்வாறு வரிசையில் மக்களை காக்கவைத்தால்தான் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியும். அப்போதுதான் அரசாங்கத்தை விமர்சிக்கும் அரசியலை செய்ய மேடை அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த மேடையை உருவாக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான தீர்மானங்களை நாம் எடுப்போம்.

கொங்கிரீட் வனாந்தரங்கள் எதற்கு என்ற கேள்வியை கேட்கின்றனர், ஆனால் இந்த கொங்கிரீட் வனாந்தரங்கள்தான் நாட்டின் அபிவிருத்திக்கு கை கொடுக்கும். நாட்டின் எதிர்கால திட்டங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகள் அவசியம், கிரிக்கெட் மைதானங்கள் இருக்க வேண்டும், இந்த நாடு கற்கால யுகத்தில் இருக்க முடியாது. மக்களின் எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும், வயிற்றை மட்டும் சிந்திக்கக் கூடாது.

ஜே.ஆர் அன்று மக்களின் எதிர்காலத்திற்கு அரசியல் செய்யவில்லை மாறாக மக்களின் வாயிற்றுக்கான அரசியல் செய்ததன் காரணமாகவே நாடு பின்னோக்கி சென்றுள்ளது. ஆனால் நாம் அவ்வாறு அல்ல, எதிர்கால அபிவிருத்திகளை சிந்திக்கின்றோம். இந்த நாட்டின் வனங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதனையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

நிதி அமைச்சருக்கு ஒரே மூளை உள்ளது, ஆனால் இங்கு இருக்கும் அனைவரையும் விட அந்த மூளை பலமானது, வெற்றிகரமான, தூர நோக்கு கொண்ட மூளை அது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற இலங்கையின் மிகப்பெரிய கட்சியை உருவாக்கும் மூளை அவருக்கு இருந்தது. ஆகவே இம்முறை அவர் கொண்டுவரும் வரவு செலவு திட்டம் நாட்டை மாற்றிமைக்கும், வெற்றிகரமான வரவு செலவு திட்டமாக அமையும். உலகில் மிகவும் சிறந்த, அதிஷ்டமான நாடக மாறும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment