(எம்.எப்.எம்.பஸீர்)
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன்துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவத்தில், அந்த ஆபாசக் காட்சிகளில் தோன்றிய தம்பதியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவருக்கும் 10800 ரூபா அபராதமும், 3 மாதா சிறைத் தண்டனையும் விதித்த பலாங்கொடை நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க சிறைத் தண்டனையை 7 வருடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக்குழு குறித்த தம்பதியினரை கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.
செப்டம்பர் 16 ஆம் திகதி பலாங்கொடை நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் பொலிஸ் பிணையளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த 16 ஆம் திகதி பலாங்கொடை மன்றில் ஆஜரான குறித்த இருவரும் தம் மீதான குற்றங்களை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் குறித்த தீர்ப்பு நேற்று (1) வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது குற்றத்தை ஒப்புக் கொண்ட மஹரகமை பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபரான புகைப்பட கலைஞரும், எல்பிட்டியவை சேர்ந்த தற்போது பன்னிப்பிட்டிய பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 25 வயது அழகுக்கலை நிலைய ஊழியரும் மன்றில் ஆஜராகினர்.
குறித்த இருவருக்கும் எதிராக 1983 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க ஆபாச வெளியீடுகள் சட்டத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 285,286 ஆம் அட்த்தியாயங்களின் கீழும் தண்டனைக்குரிய குற்றமொன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையிலே, அக்குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்தே தீர்ப்பளித்த நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க, குறித்த இருவருக்கும் 10,800 ரூபா அபராதமும், 7 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment