இராஜதுரை ஹஷான்
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருளின் விலையை தன்னிச்சையாக அதிகரித்துள்ளதால் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க நேரிடும். எரிபொருளை பெற்றுக் கொள்வதில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என கனிய வளங்கள் பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. எரிபொருளை பெற்றுக் கொள்வதில் அரசாங்கத்திடம் நிதி கிடையாது.என்பதே உண்மை.
எரிபொருள் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா, எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுமா என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். இதன் காரணமாகவே தேவைக்கு மேலதிகமாக எரிபொருளை பெற்று சேமித்துக் கொள்கிறார்கள்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டம் ஆறு மாத காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும். எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையை தொடர்ந்து பேணாத காரணத்தினால் எரிபொருள் இறக்குமதி நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதில் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது அவசர அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக எரிபொருள் அதிக விலைக்கு பெற்றுக் கொள்ளப்படுகிறது.பெற்றுக் கொள்ளப்படும் எரிபொருளின் தரம் குறித்து எவ்வித ஆய்வுகளும் இடம்பெறுவதில்லை.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து ஆட்சியில் அனைத்து அரசாங்கங்களும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு பொறுப்பு கூற வேண்டும்.
பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனம் இலங்கை வங்கிக்கும், மத்திய வங்கிக்கும் 3.3 பில்லியன் கடனை செலுத்த வேண்டியுள்ளது. கூட்டுத்தாபனம் கடன் சுமையாலும், டொலர் பிரச்சினையாலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உரிய காரணிகளின்றி எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை காட்டிலும், ஐ.ஓ.சி நிறுவனம் இலாபமடைகிறது.
இருப்பினும் தன்னிச்சையான முறையில் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதால், பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க நேரிடும் என்றார்.
No comments:
Post a Comment