கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் பால்மா தொகையை வேறு நாட்டுக்கு வழங்குவதற்கு கலந்துரையாடி உள்ளோம் - பால்மா இறக்குமதியாளர்களின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் பால்மா தொகையை வேறு நாட்டுக்கு வழங்குவதற்கு கலந்துரையாடி உள்ளோம் - பால்மா இறக்குமதியாளர்களின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் 360 மெட்ரிக் தொன் பால்மா அடங்கிய 16 கொள்களன்களை விடுவித்துக் காெள்வதற்கு தேவையான டொலர்களை வர்த்தக வங்கிகளுக்கு விடுவிப்பதாக மத்திய வங்கி அறிவித்திருந்த போதும் இன்று (நேற்று) மாலை வரை விடுவிக்கவி்ல்லை. அதனால் துறைமுகத்தில் இருக்கும் பால்மா தொகையை வேறு நாட்டுக்கு வழங்குவதற்கு வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றோம் என பால்மா இறக்குமதியாளர்களின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

துறைமுகத்தில் தேங்கி இருக்கும் பால்மா தொகையை விடுவித்துக் கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், துறைமுகத்தில் தேங்கி இருக்கின்ற பால்மா தொகையை விடுவித்துக் கொள்வதற்கு தேவையான டொலர்களை விடுவிப்பதாக அரசாங்கம் நேற்று (நேற்று முன்தினம்) தெரிவித்திருந்த போதும் இதுவரை வர்த்தக வங்கிகளுக்கு டொலர்கள் விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் துறைமுகத்தில் இருக்கும் பால்மா தொகை பழுதடையும் அபாயம் இருக்கின்றது.

அதனால் அருகில் இருக்கும் வெளிநாடு ஒன்றுக்கு வழங்குவதற்கு வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றோம். அதன் பிரகாரம் இடம்பெற்றால் நாட்டில் பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.

வர்த்தக வங்கிகளுடன் இன்று (நேற்று) மாலை வேளையில் கதைத்த போதும் பால்மா தொகையை விடுவித்துக் கொள்வதற்கான டொலர் கிடைக்கவில்லை என்றே வங்கி அறிவித்தது. அதனால் வங்கிகளில் பணம் வைப்பிலிட்டு டொலர் கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கின்றது.

மேலும் ஒரு டொலர் 238 ரூபா அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு சில ஏற்றுமதியாளர்கள் முன்மொழிகின்றனர். அவ்வாறு டொலருக்கு 35 ரூபா அதிகமாக பெற்றுக் கொண்டு பால்மா தொகையை விடுவித்துக் கொண்டால் ஒரு கிலாேவுக்கு 4.10 டொலர் மேலதிக செலவு ஏற்படுவதன் மூலம், துறைமுகத்திலேயே பால்மா கிலாே ஒன்றுக்கு 144 ரூபா மேலதிகமாக அதிகரிக்கப்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment