(இராஜதுரை ஹஷான்)
பிரதான நிலை அரிசி உற்பத்தி உரிமையாளர்கள் அரசாங்கத்துடன் ஒன்றினைந்து செயற்படுகிறார்கள். அரிசியின் விற்பனை விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதான நிலை அரிசி உற்பத்தியாளர்கள் கையில் எடுத்து அரசாங்கத்தை பலவீனமாக்கியுள்ளார்கள். 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய அரசாங்கம் செயற்படவில்லை. அரசாங்கத்தை எதிர்த்து நாட்டு மக்கள் வெகுவிரைவில் வீதிக்கிறங்கி போராடுவார்கள் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
சிங்கள ராவய அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 69 இலட்ச மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. தேசிய கொள்கைக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயற்படுகிறது. இனிவரும் காலத்திலாவது மக்கள் சிறந்த அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் தவறான கொள்கையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உரம் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்போகத்திலும் இந்நிலை தொடர்ந்தால் வீதிக்கிறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும்.என்றார்.
No comments:
Post a Comment