(எம்.மனோசித்ரா)
இலங்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு 4 புதிய மார்பகப் புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதோடு, இரு மார்பக புற்று நோயாளர்கள் உயிரிழக்கின்றனர். மார்பகப் புற்று நோயை முன்னரே இனங்காண்பதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்று புற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரண தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வருடாந்தம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை மார்பகப் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வூட்டும் காலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இம்முறை, 'முன்னரே அறிந்து உயிரை பாதுகாப்போம்' என்ற தொனிப் பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை 31,800 மார்பகப் புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய மணித்தியாலயத்திற்கு 4 புதிய மார்பகப் புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதோடு, இருவர் உயிரிழக்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் புதிததாக 4500 மார்பகப் புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
மார்பகப் புற்று நோய் ஆண், பெண் என இரு பாலாருக்கும் ஏற்படக் கூடியது. ஆனால் இதில் 100 வீத அபாயத்திற்கு உள்ளாகக் கூடியவர்கள் பெண்கள் ஆவர். மது அருந்துதல், புகையிலை உண்ணல் மற்றும் புகைப்பிடித்தல் என்பவற்றின் காரணமாகவும் தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் பரம்பரையின் காரணமாகவும் புற்று நோய் ஏற்படுகிறது.
ஆனால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். எனவே 20 வயதுக்கு மேற்பட்ட சகல பெண்களும் வாராந்தம் மார்பகப் புற்று நோய் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment