(இராஜதுரை ஹஷான்)
மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 21ஆம் திகதி காலை முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்கப்படும். தூர பிரதேச பயணிகள் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிகையில், மாகாணங்களுக்கிடையில் தற்போது அமுலில் உள்ள பொது போக்குவரத்து தடை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டவுடன் மாகாணங்களுககிடையிலான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புகையிரதத்தில் சன நெரிசலை குறைப்பதற்காக காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத போக்குவரத்திற்கு 130 புகையிரத பயணங்களை சேவையில் ஈடுபடுத்தவும், மாகாணங்களுக்குள்ளான புகையிரத பயணங்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும். புதிய சுகாதார வழிகாட்டி அறிவுறுத்தல்கள் அனைத்து புகையிரத நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் மக்கள் புகையிரத சேவையினை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் குறைவடைந்ததும் பெரும்பாலானோர் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றவதில்லை. ஆகவே இனியாவது அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.என்றார்.
No comments:
Post a Comment