13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : 4 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : 4 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என்று இலங்கை வளிமண்லவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

13 மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்பதோடு, ஏனைய பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

இப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலேயே 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதே போன்று காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக் கூடிய பகுதிகளிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment