Sinopharm தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்த சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன, இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை நிறுவுவதற்கான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளார்.
Sinopharm (Sinopharm's Beijing Institute of Biological Products Co., Ltd) நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, சீனாவுக்கான இலங்கையின் தூதுவர் கலாநிதி. பாலித கோஹன நேற்றையதினம் (23) அங்கு விஜயம் செய்த இக்கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
தூதரக அதிகாரிகளுடன் Sinopharm தலைமையகத்தின் துணைத் தலைவர் ஷி ஷெங்கி, உயிரியல் பொருட்கள் பிரிவின் தலைவர் ஸு ஜிங்ஜின் மற்றும் சர்வதேசப் பிரிவின் துணைத் தலைவர் யான் பிங் ஆகியோர் தூதுவரை வரவேற்றதுடன், தூதுக்குழுவினரின் சுற்றுப்பயணத்திற்கு வசதிகளை வழங்கினர். மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் வருடத்திற்கு ஐந்து பில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும் தடுப்பூசி உற்பத்தி ஆலைக்கு தூதுவர் விஜயம் செய்தார்.
வர்த்தக அடிப்படையில் இலங்கைக்கு 23 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்கிய Sinopharm இற்கு தூதுவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
Sinopharm பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஒப் பயோலொஜிகல் ப்ரொடக்ட்ஸ் நிறுவனம் 1919 இல் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் தற்போதைய அதிநவீன வசதிகளை வரை படிப்படியாக அடைந்து கொண்ட முன்னேற்றங்கள் குறித்து தூதுக்குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
விஜயத்தின் போது, இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி நிரப்பும் ஆலையொன்றை நிறுவுவதன் நன்மையை தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார். உள்ளூர் சந்தை வாய்ப்புக்கள் மற்றும் பிராந்தியத்திலான பரந்த சந்தை அணுகலை அவர் மேலும் வலியுறுத்தினார். Sinopharm நிர்வாகம் இதற்கு நேர்மறையாக பதிலளித்தது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 07 ஆம் திகதி, தூதுவர் Sinopharm இற்கு விஜயம் செய்திருந்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதத்தை நிறுவனத்தின் தலைவர் லியு ஸிங்ஸெனிடம் கையளித்திருந்தார்.
No comments:
Post a Comment