ஜே.ஆர், சந்திரிகா அவசர கால விதிமுறைகளை பிரகடனப்படுத்தி மக்களுக்கு நன்மைகளை செய்தனர் ஆனால் ராஜபக்ஷ அரசாங்கத்தால் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, September 10, 2021

ஜே.ஆர், சந்திரிகா அவசர கால விதிமுறைகளை பிரகடனப்படுத்தி மக்களுக்கு நன்மைகளை செய்தனர் ஆனால் ராஜபக்ஷ அரசாங்கத்தால் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை - ருவன் விஜேவர்தன

எம்.மனோசித்ரா

அவசரகால விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு உணவு பொருளினதும் விலையையும் அரசாங்கத்தால் குறைக்க முடியாமல் போயுள்ளது. எனவே அதனை மீளப் பெறுவதே தற்போது பொறுத்தமான நடவடிக்கையாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

களஞ்சியசாலைகளில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அதன் விலை அதிகரிக்கவில்லை. மாறாக சீனியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்களிடம் டொலர் இன்மையே அதன் விலை அதிகரிப்பிற்கு காரணமாகும் என்றும் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அவசரகால விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு உணவு பொருளின் விலையையும் குறைக்க முடியாமல் தோல்வியடைந்துள்ள அரசாங்கம், தற்போது செய்ய வேண்டியது சகல அவசரகால விதிமுறைகளையும் மீளப் பெறுவதாகும்.

மக்களுக்கு நியாயமான விலையில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும் என்ற போர்வையில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தத் தவறியது தற்போதைய அரசாங்கத்தின் பெரும் பலவீனமாகும்.

1978 ஆம் ஆண்டு சூறாவளி ஏற்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், சுனாமி ஏற்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அவசர கால விதிமுறைகளை பிரகடனப்படுத்தி மக்களுக்கு நன்மைகளை செய்தனர்.

எனினும் கொவிட் நிலைமையின் போது ராஜபக்ஷ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள அவசரகால விதிமுறைகளால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் பெறவில்லை.

மேற்கூறப்பட்ட முதல் இரு சந்தர்ப்பங்களிலும் அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்ட போது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்தி சீனி மற்றும் அரிசி என்பவற்றை கைப்பற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புக்களில் மகாவலி வலயத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபால கம்லத்தினுடைய களஞ்சியசாலையும் முற்றுகையிடப்பட்டது. எவ்வாறிருப்பினும் அதன் பின்னரும் அவர் இராஜாங்க அமைச்சு பதவியை வகிப்பதற்கான தார்மீக உரிமை உள்ளதா?

களஞ்சியசாலைகளில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அதன் விலை அதிகரிக்கவில்லை. மாறாக சீனியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்களிடம் டொலர் இன்மையே அதன் விலை அதிகரிப்பிற்கு காரணமாகும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment