(எம்.மனோசித்ரா)
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் களனி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொண்ட ஒரு இலட்சத்திற்கும் அதிக பணம் என்பவற்றுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை களனி பொலிஸ் பிரிவில் நுன்கமுகொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 8 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய களனி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். களனி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் கெஹெரகொட பிரதேசத்தில் 1 கிராம் 430 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் போதைப் பொருள் விற்பனை மூலம் பெற்றுக் கொண்டதாக சந்தேகிக்கப்படும் 107,970 ரூபா பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment