(ஆர்.யசி)
கொவிட் வைரஸ் பரவலில் பாதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுவரையில் ஐயாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் மகப்பேற்று மற்றும் சிறுவர் நல பணிப்பாளர் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.
நாட்டில் பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் பரவலில் கர்ப்பிணி தாய்மார் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதார பணியகத்தின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இப்போதுள்ள கொவிட் பரவலில் அதிகமான கர்ப்பிணி தாய்மார் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் தாய் சேய் மரணத்திற்கு பிரதான காரணமாக கொவிட் வைரஸ் காணப்படுகின்றது. குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் தாய் மரணங்கள் அதிகளவில் பதிவாகியுள்ன.
இலங்கையில் கொவிட் வைரஸ் பரவல் ஏற்பட்ட காலத்தில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் வரையில் எந்தவொரு கர்ப்பிணி தாய் மரணமும் பதிவாகவில்லை. எனினும் நாட்டில் டெல்டா வைரஸ் பரவல் ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் பின்னரே குறித்த 41 கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த நிலைமை தொடராது இருக்க கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டின் இந்த நிலைமை தொடருமானால் சமூகத்திலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே வைரஸ் பரவலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது என்றார்.
No comments:
Post a Comment