கட்டட நிர்மாண பொருட்களை அதிகரித்த விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை : கல்முனை மாநகர சபை எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, September 3, 2021

கட்டட நிர்மாண பொருட்களை அதிகரித்த விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை : கல்முனை மாநகர சபை எச்சரிக்கை

கல்முனை மாநகர சபை எல்லையினுள் கட்டட நிர்மாணப் பொருட்கள் அனைத்தும், நிர்ணய விலையிலேயே விற்கப்பட வேண்டும் எனவும், மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர சபை அறிவித்துள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற மாநகர சபையின் பொறியியல், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் வருமான பரிசோதகர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது இவ்விடயம் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்பட்டு, மக்களுக்கு நிர்ணய விலையில் கட்டட நிர்மாணப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

இவ்விடயம் குறித்து மாநகர முதல்வர் தெரிவிக்கையில்; கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கட்டட நிர்மாணப் பொருட்களுக்கு என்றுமில்லாதவாறு திடீரென கடுமையான விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பற்றி ஆராய்ந்தபோது, இந்த விலையேற்றமானது அரசாங்கத்தின் அனுமதியுடன் உற்பத்தி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறித்த பொருட்களை விநியோகிக்கும் தரகர்களே தன்னிச்சையாக விலையேற்றம் செய்து, கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆகையினால், அம்பாறை மாவட்ட கச்சேரியின் கட்டட நிர்மாணப் பொருட்களுக்கான விலை நிர்ணயக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிர்ணய விலைக்கே கல்முனை மாநகர சபை எல்லையினுள் செங்கல், முண்டுக்கல், முக்கால் இஞ்சிக்கல், கட்டு மண், பூச்சு மண், அத்திவாரம் நிரப்பும் மண், கிறவல் போன்றவை விற்பனை செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையினால் கண்டிப்பான உத்தரவு விடுக்கப்படுகிறது. 

அவ்வாறே சீமெந்து மற்றும் கம்பி போன்றவை உரிய கம்பனிகளால் குறிக்கப்பட்ட நிர்ணய விலைகளுக்கே விற்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது.

அதேவேளை, இப்பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கட்டாயம் பற்றுச்சீட்டு வழங்க வேண்டும். நுகர்வோர் கட்டாயம் இப்பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டே, குறித்த பொருட்களை பொறுப்பேற்றுச் செல்ல வேண்டும். பற்றுச்சீட்டு இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள், மாநகர சபையின் வருமானப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்படும்.

பதிவு செய்யப்படாத வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறே பதிவு செய்யபடாத தரகர்கள் யாராவது கல்முனை மாநகர சபை எல்லையினுள் வியாபாரத்தில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டார்.

(கல்முனை, பெரியநீலாவணை விசேட நிருபர்கள்)

No comments:

Post a Comment