மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக பல கோடி ரூபாய் செலவில் கொவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவொன்று, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன் புதன்கிழமை (01) தெரிவித்தார்.
இச்சிகிச்சைப் பிரிவு ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள், வைத்திய அத்தியட்சகர் தலமையில் நடைபெற்றன. இதன்போது பொது வைத்திய நிபுணர்கள், மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், என பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர்.
இச் சிகிச்சை பிரிவு கொரோனா நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து அதி தீவிர சிகிச்சையளிக்கும் பிரிவாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் 6 நோயாளிகளை வைத்து சிகிச்சையளிக்கக் கூடிய விதத்தில் இச்சிகிச்சை பிரிவு அமையப் பெற்றுள்ளதுடன, நோயாளிக்கு அண்மையில் இருந்து சிகிச்சை வழங்குவதற்கான வைத்திய துறையில் அதிநவீன முறைகளில் ஒன்றான வைரஸ் கிருமிகளுக்கு எதிர்மறை அழுத்தம் கொடுக்கக் கூடிய (negative pressure room) இந்த சிகிச்சை கூடம் அமையப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
குறித்த சிகிச்சை பிரிவை அமைப்பதற்கு பல கோடி ரூபாய்க்கள் செலவு செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சிகிச்சை கூடங்கள் இலங்கையில் ஒரு சில மாவட்டங்களிலையே அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சிகிச்சை பிரிவானது புதன்கிழமை (01) முதல் இயங்குவதுடன், எமது பிரதேச மக்களுக்கு இதுவொரு வரப்பிரசாதமாக அமைய உள்ளதாக வைத்திய அத்தியட்சகர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
(பெரியபோரதீவு நிருபர்)
No comments:
Post a Comment