(நா.தனுஜா)
சிறைத் தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகளில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவி அவசியம் என்பதுடன் அதிலிருந்து அவர்கள் மீட்சியடைவதற்கான புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.
போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளைக் கையாள வேண்டிய முறை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தன்னார்வ மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் புதன்கிழமை நீதியமைச்சர் அலி சப்ரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.
இது பற்றி தெளிவுபடுத்தும் வகையில் ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, சிலர் குற்றவியல் தண்டனைகள் மூலம் போதைப் பொருள் பாவனையிலிருந்து மீளக்கூடும். இருப்பினும் மிகையான போதைப் பொருள் பாவனையாளர்கள் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தண்டனைகளை எதிர்கொள்ளக் கூடிய இயலுமையைக் கொண்டிருப்பதென்பது ஒப்பீட்டளவில் குறைவாகும். அதுமாத்திரமன்றி ஒருவரை சிறையில் அடைப்பதன் ஊடாக சமூகத்தின் போதைப் பொருள் பாவனையைக் குறைக்கமுடியாது.
எனவே போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவி அவசியம் என்பதுடன் அதிலிருந்து அவர்கள் மீட்சியடைவதற்கான புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment