முத்துறைகளும் சுயாதீனமாக செயற்படுகின்றன, ஆகவே எதனையும் இரசகியமாக செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 4, 2021

முத்துறைகளும் சுயாதீனமாக செயற்படுகின்றன, ஆகவே எதனையும் இரசகியமாக செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

இராஜதுரை ஹஷான்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை இலங்கை விவகாரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள் நாட்டின் பொதுச் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன. சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய முத்துறைகளும் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆகவே எதனையும் இரசகியமாக செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதியும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இவ்விரு கூட்டத் தொடர்களிலும் இலங்கை விவகாரம் நிச்சயம் கருத்திற் கொள்ளப்படும்.

மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் போது இலங்கை விவகாரம் அதிகளவில் பேசப்படும். இம்முறை கூடவுள்ள கூட்டத் தொடரை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள் இலங்கையின் பொதுச் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் காணாமல் போனோர் விவகாரம், மீள்குடியமர்த்தல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளார். ஆணைக்குழுவின் முதற்கட்ட அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையோரையும் விடுதலை செய்வற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலான ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை சபையின் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.

பாராளுமன்றம், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறை ஆகிய பிரதான துறைகள் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆகவே எவ்விடத்தையும் இரகசியமாக செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றில் விவாதிக்கப்படும். தேவையான விடயங்கள் ஊடங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment