அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 20 - 30 வயதிற்குட்பட்டோர் விஞ்ஞானபூர்வமாக தெரிவு செய்யப்பட்டார்களா? பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நிலையென்ன? : ஹர்ஷ டி சில்வா கேள்வி - News View

About Us

About Us

Breaking

Saturday, September 4, 2021

அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 20 - 30 வயதிற்குட்பட்டோர் விஞ்ஞானபூர்வமாக தெரிவு செய்யப்பட்டார்களா? பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நிலையென்ன? : ஹர்ஷ டி சில்வா கேள்வி

நா.தனுஜா

அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 - 30 வயதிற்குட்பட்டோர் பைஸர் தடுப்பூசியைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக விஞ்ஞானபூர்வ அடிப்படைகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டார்களா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குச் செலுத்துவதற்கென பைஸர் தடுப்பூசி மாத்திரமே பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையில், குறைந்தபட்சம் எதிர்வரும் நவம்பர் மாதம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கேனும் பைஸர் தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் தீர்மானத்தின் பிரகாரம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 20 - 30 வயதிற்கு இடைப்பட்டோருக்குத் கொவிட்-19 தடுப்பூசியை வழங்குவதற்கென 50,000 பைஸர் தடுப்பூசிகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில், இதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இது குறித்து ஹர்ஷ டி சில்வா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னுரிமைக்குரிய பிரிவினராக அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 - 30 வயதிற்கு இடைப்பட்டோர் அடையாளங்காணப்பட்டுள்ளனரா?

இதற்கென 50,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் தொடர்பான தீர்மானங்களின்போது பின்பற்றப்படும் விஞ்ஞான ரீதியான அடிப்படைகளின் பிரகாரம் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளதா? எதிர்வரும் நவம்பர் மாதம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நிலையென்ன?

நாடளாவிய ரீதியிலுள்ள 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குச் செலுத்துவதற்கென பைஸர் தடுப்பூசி மாத்திரமே பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தள்ளது. தடுப்பூசி வழங்கப்படாமல் மீண்டும் பாடசாலைகளைத் திறக்க முடியாது.

எனவே குறைந்தபட்சம் எதிர்வரும் நவம்பர் மாதம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கேனும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். அம்பாந்தோட்டையிலுள்ள ஆண்களும், பெண்களும் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment