கினிய குடியரசில் இராணுவம் சதிப்புரட்சி : ஜனாதிபதி கைது : காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

கினிய குடியரசில் இராணுவம் சதிப்புரட்சி : ஜனாதிபதி கைது : காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிப்பு

கினிய குடியரசில் இராணுவம் சதிப்புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், ஜனாதிபதியை கைது செய்து, நாட்டில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன.

"ஜனாதிபதியை கைது செய்த பிறகு, அரசியலமைப்பைக் கலைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று AFP செய்திச் சேவைக்கு அனுப்பப்பட்ட காணொளியில் இராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு தெரிவித்துள்ளனர்.

முன்னர் வெளியான காணொளியில் 83 வயதான ஜனாதிபதி ஆல்பா கான்டே இராணுவத்தினரால் சூழப்பட்ட ஒரு சோபாவில் அமர்ந்திருப்பதை வெளிக்காட்டியது. அவர் இருக்கும் இடம் தெளிவாக தெரியவில்லை.

தற்சமயம் கினியாவில் அரசாங்கம் கலைக்கப்பட்டு நில மற்றும் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தேசிய தொலைக்காட்சி சேவையை கைப்பற்றிய சிறப்பு படைகள், "மறு அறிவிப்பு வரும் வரை" நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை விதிப்பதாகவும், ஆளுநர்கள் இராணுவத்தால் மாற்றப்படுவார்கள் என்றும் கூறியது.

கினிய குடியரசு கணிசமான கனிம வளங்களை கொண்டுள்ள போதிலும், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். சுமார் 13 மில்லியன் மக்கள் வாழும் நாடு நீண்ட காலமாக அரசியல் ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் ஜனாதிபதி தேர்தலில் ஆல்பா கான்டே வெற்றி பெற்று ஜனாதிபதியானாா். 

தொடா்ந்து ஜனாதிபதியாக இருந்து வந்த அவா், 3 ஆவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தொடா்ந்தாா். ஆனால் அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது.

கினியாவின் ஜனாதிபதி ஆல்பா கான்டே பதவியேற்ற பின்னர், கினியா நாட்டில் இருந்து அலுமினியத்தின் தாது பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால் இந்த ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை தலைநகா் கோனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச்சூடு சப்தம் பல மணி நேரம் தொடா்ந்து கேட்டது. இதையடுத்து, அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கா்னல் மமாடி டம்போயா, ஜனாதிபதி ஆல்பா கான்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தாா்.

அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என அவர் குறிப்பிட்டார். 

கினியா ராணுவத்தின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், “துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதியின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவிக்காத நிலையில், அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.

No comments:

Post a Comment