(நா.தனுஜா)
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்படுத்தப்படும் அளவு கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்திருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான இணையவழிக் கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அமைச்சர், கடந்த காலங்களில் நாளொன்றில் பயன்படுத்தப்பட்ட ஒட்சிசனின் அளவு சில சந்தர்ப்பங்களில் 140 தொன் வரையிலும் அதிகரித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கல் பணிகள் காரணமாக வைரஸ் பரவல் ஒப்பீட்டளவில் முன்னரை விடவும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள அவர், வைரஸ் பரவலை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி கண்டி மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டத்தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியமான ஸ்புட்னிக் தடுப்பூசிகளை இயலுமானவரை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment