மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (22) மாலை பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதியில் சுமார் 40 வருடங்களாக கோவில் மோட்டை பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் குறித்த அரச காணியை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோவில் மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டதோடு, பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நிலையில், வட மாகாண ஆளுநர் குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் குறித்த காணி தங்களுக்கு வேண்டும் என மடு தேவாலய பரிபாலன சபையினர் கோரி வந்ததுடன் குறித்த காணியை பெற்றுக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 'கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டும்' என இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கேற்க பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
மன்னார் வந்த நிலையில் இடைவழியில் வழி மறித்த கோயில் மோட்டை விவசாயிகள் தங்களின் காணி பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கோயில் மோட்டை வயல் காணிக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதை விட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் இயன்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
கேசரி
No comments:
Post a Comment