(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது டெல்டாவின் பிறழ்வுகளே வேகமாகப் பரவுகின்றன. இந்த பிறழ்வுகளே தொற்றாளர்கள் தீவிர நிலைமையை அடைவதற்கும் மரணங்களின் வீதம் அதிகரிப்பதற்கும் ஏதுவாய் அமைந்துள்ளன.
எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போன்றல்லாமல் மிகவும் இறுக்கமான முடக்கம் மேலும் இம்மாதம் 18 ஆம் திகதி வரையேனும் நீடிக்கப்படுமானால் சிறந்த பிரதிபலனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிதாக உருவாகிய அலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் சந்தர்ப்பமாக நாம் இதனை காண்கின்றோம். போக்கு வரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாகவே வைத்தியசாலைகள் நிரம்பி வழியக்கூடிய நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது. அதே போன்று மரணங்களின் எண்ணிக்கையும் கணிசமானளவு குறைவடைந்துள்ளது.
இதே நிலைமையிலேனும் இம்மாதம் 18 ஆம் திகதி வரை முடக்கம் நீடிக்கப்படுமாயின் சிறந்த பிரதிபலனைப் பெற முடியும். இவற்றுக்கிடையில் தடுப்பூசி வழங்கும் பணிகளையும் துரிதமாக முன்னெடுத்துச் செல்வதும் அத்தியாவசியமானதாகும்.
எனினும் முழுமையான தடுப்பூசி வழங்கலை நிறைவு செய்தாலும் முடக்கம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது பிரதானமானதாகும்.
No comments:
Post a Comment