தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதாக இருந்தால் தொழில்நுட்ப ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதாக இருந்தால் தொழில்நுட்ப ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்துவதாக இருந்தால், அது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவின் த சொய்சா தெரிவித்தார்.

கொவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மேற்கொள்ளப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலங்களில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.

கொவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தை தளர்த்தி, எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை திறப்பதாக இருந்தால், இதுவரை ஓரளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்திருக்கும் கொவிட் நிலைமையை, அவ்வாறே தொடர்ந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பெரும்பாலானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை பூரணப்படுத்த வேண்டும்.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பாதுகாத்துக் கொள்வது கட்டாயமாகும். நாட்டை முழுமையாக திறப்பதாக இருந்தால், கூடுதலாக எச்சரிக்கையான பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் தற்போதைய தனிமைப்படுத்தல் சட்ட கால நிலைமையில் நூறு வீதம் திருப்தியடையும் வகையில் நாடு கடைப்பிடிக்கா விட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் கொவிட் நோயாளர்கள் மற்றும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் குறைவை காண்கின்றோம்.

அதனால் எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக இருந்தால், தற்போது கட்டுப்படுத்திக் கொண்டு வரும் கொவிட் கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment