(நா.தனுஜா)
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையார் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலம் உட்பட நாட்டில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல வருடங்களாக அவசர காலச் சட்டம் நடைமுறையில் இருந்திருக்கின்றது. அவ்வாறிருக்கையில் தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போது, அதனை எதிர்க்கட்சியினர் மிகப்பெரும் சர்ச்சைக்குரிய விடயம் போன்று பேசுகின்றார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களும் நாம் செல்ல வேண்டிய பாதையும்' என்ற தலைப்பில் இன்று வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல வருடங்களாக அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்திருக்கின்றது. அக்காலப்பகுதியிலும் அரசாங்கங்கள் ஆட்சியை முன்னெடுத்து வந்திருக்கின்றன.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையார் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலும் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்திருக்கின்றது.
அவ்வாறிருக்கையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் விலைகளை சரியான மட்டத்தில் பேணுவதற்கும் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளபோது, அதனை எதிர்க்கட்சியினர் மிகப்பெரும் சர்ச்சைக்குரிய விடயம் போன்று பேசுகின்றார்கள்.
அதேவேளை மறுபுறம் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில் ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை மீட்டெடுப்பதன் ஊடாக பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்.
தற்போது நாட்டில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்திருப்பதால், இன்னும் 2 - 3 மாதங்களில் அதன் தீவிரம் குறைவடையும் போது சுற்றுலாத் துறையை பழைய நிலைக்கு மீளத் திருப்பமுடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment