காத்தான்குடியிலிருந்து முதல் தடவையாக புற்றுநோய் வைத்திய நிபுணராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.ஐ.எம்.அஸ்வர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

காத்தான்குடியிலிருந்து முதல் தடவையாக புற்றுநோய் வைத்திய நிபுணராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.ஐ.எம்.அஸ்வர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வரும் காத்தான்குடியைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஐ.எம்.அஸ்வர் புற்றுநோய் வைத்திய நிபுணராகுவதற்கான கற்கைகளை மேற்கொள்ள நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்பரீட்சையின் பெறுபேறு இன்று (14) வெளியிடப்பட்டுள்ள நிலையில் புற்றுநோய் வைத்திய நிபுணராகுவதற்கான கற்கைகளை மேற்கொள்ள நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வைத்தியர் அஸ்வர் எதிர்காலத்தில் புற்றுநோய் வைத்திய நிபுணராக உள்ளார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த முகம்மது இப்றாகீம் உம்முகுல்தூம் தம்பதிகளின் மகனான வைத்தியர் அஸ்வர் தனது ஆரம்பக் கல்வியை காத்தான்குடி முதலாம் குறிச்சி அந்நாசர் வித்தியாலத்திலும், உயர் கல்வியை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையிலும் கற்றதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை முடித்து டாக்டராகி அநுராதபுரம் வைத்திய வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சியை முடித்து 2019ம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்தியராக நியமிக்கப்பட்டு அதில் கடமையாற்றி வருகின்றார்.

காத்தான்குடியிலிருந்து தெரிவு செய்யப்பட உள்ள முதல் புற்றுநோய் வைத்திய நிபுணராகவும் கிழக்கு மாகாணத்தில் புற்றுநோய் வைத்திய நிபுனர் டாக்டர் ஏ.இக்பால் அவர்களுக்கு பிறகு புற்றுநோய் வைத்திய நிபுணராக தெரிவாக உள்ள வைத்தியராகவும் அஸ்வர் திகழ்கின்றார்.

இத்தெரிவின் மூலம் வைத்தியர் அஸ்வர் காத்தான்குடிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தான் ஒரு புற்றுநோய் வைத்திய நிபுணராக தெரிவாவதற்கான பரீட்சையில் சித்தியடைந்தமைக்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதுடன் புற்றுநோய் பற்றி நன்கு தெரியும் இதனால் பாதிக்கப்படும் வறிய மக்கள் படும் வேதனைகளை நான் நேரில் பார்ப்பவன் என்ற வகையில் வறிய மக்களுக்கு இன மத மொழி வேறுபாடின்றி பணியாற்ற விருப்பமாக உள்ளதாகவும் வைத்தியர் அஸ்வர் குறிப்பிடுகின்றார்.

மிகவும் எளிமையாக அனைவருடனும் அன்பாக பழக கூடிய சிறந்த இளம் வைத்தியராக வைத்தியர் அஸ்வர் காணப்படுகின்றார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
14.09.2021

No comments:

Post a Comment