அசாத் சாலியை விடுதலை செய்ய நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை - கோரிக்கையை நிராகரித்தார் கொழும்பு பிரதான நீதிவான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

அசாத் சாலியை விடுதலை செய்ய நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை - கோரிக்கையை நிராகரித்தார் கொழும்பு பிரதான நீதிவான்

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்சியங்களும் இல்லை என்பதே நீதிமன்றின் முடிவு என அறிவித்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, அவரை விடுவிக்குமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார்.

'இந்த விடயத்தில் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான பின்னணியில், அக்குற்றப் பத்திரிகையுடன் தொடர்புடைய பிரதிவாதியை, கீழ்நிலை நீதிமன்றமான நீதிவான் நீதிமன்றின் ஊடாக விடுவிக்க, எந்த நீதிமன்ற அதிகாரமும் இல்லை' என சுட்டிக்காட்டியே அவரை விடுவிக்குமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கை நீதிவான் நிராகரித்தார்.

எந்த சாட்சியங்களும் இல்லாததால் அசாத் சாலியை விடுதலை செய்ய வேண்டும் என, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில், அசாத் சாலியின் சட்டத்தரணிகள் முன் வைத்த கோரிக்கையை இன்றையதினம் ஆராய்ந்தே பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

இன்றையதினம் இது குறித்த வழக்கு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகளுடன் அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா ஆஜரானார்.

சந்தேக நபரான அசாத் சாலி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன பிரசன்னமானார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைகளில் ஆரம்பத்தில் மேலதிக விசாரணை அறிக்கை ஒன்று சி.ஐ.டி.யினரால் மன்றில் முன் வைக்கப்பட்ட நிலையில் சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா மன்றில் விடயங்களை முன் வைத்தார்.

'இந்த விவகாரத்தில் சந்தேக நபரான அசாத் சாலியை, குற்றவியல் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் விடுவிக்க, அவர் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே நான் இங்கு பிரசன்னமாகியுள்ளேன்.

தற்போதைய நிலையில், இந்த சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் 2 ஆம் இலக்க நீதிமன்றில் 2778/21 எனும் இலக்கத்தின் கீழ் சட்டமா அதிபரால் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபரும் தனது கைதினை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளார். இவ்விரு மனுக்களும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மேல் நீதிமன்ற வழக்கில் பிரதிவாதி ஒருவரை சாட்சிகள் இல்லை எனக்கூறி விடுவிக்க நீதிவான் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை. அதற்கான எந்த வழிமுறைகளும் குற்றவியல் சட்ட ஏற்பாடுகளில் கிடையாது. எனவே இந்த சந்தேக நபரை விடுவிக்க இந்த மன்றுக்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை.' என வாதிட்டார்.

இதனையடுத்து அசாத் சாலி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன வாதங்களை முன் வைத்தார்.

'மேல், உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பினும், இம்மன்றுக்கு உள்ள நீதிமன்ற அதிகாரத்தின் கீழ், சாட்சிகள் இல்லையெனில் குற்றவியல் சட்ட விதிமுறைகள் பிரகாரம் செயற்பட எந்த தடையும் இல்லை.

சந்தேக நபரான அசாத் சாலி, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இக் கைதை அடுத்து அசாத் சாலிக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மிக பாரதூரமானவை.

தீவிரவாத பயங்கரவாத சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியளித்தமை மற்றும் உடந்தையாகவிருந்தமை, வன்முறை அல்லது மத, இன அல்லது சமூக ரீதியான விரோதத்தை தூண்டும் வகையில் அல்லது வேறுபட்ட சமூகங்கள் அல்லது இனங்கள் மத குழுக்களுக்கிடையில் பகைமையை தூண்டும் விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காகவும் மற்றும் 21.04.2019 அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார சந்தேக நபர்களுடன் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துவதற்காக விசாரிக்கப்படுவதாக கூறப்பட்டது. எனினும் இது குறித்த விசாரணைகளின் பின்னர் சி.ஐ.டி. மன்றில் அறிக்கை முன் வைத்துள்ளது.

கடந்த 2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி விசாரணை நிறைவடைந்துள்ளதாக கூறி சி.ஐ.டி. முன் வைத்துள்ள அறிக்கையில் மிகத் தெளிவாக விடயங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் சி.ஐ.டி. ஆகஸ்ட் 17 அன்று விசரணை நிறைவடைந்ததாக கூறிய போதும், அதற்கு முன்பதாகவே, அதாவது ஜூன் 23 ஆம் திகதியே சட்டமா அதிபர் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். விசாரணை முடிய முன்னர் அவர் எப்படி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என்பது வேறு பிரச்சினைக்குரிய விடயமாகும்.

எனினும் இங்கு சி.ஐ.டி. முன் வைத்துள்ள விசாரணை அறிக்கையில், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில், அசாத் சாலிக்கு எந்த தொடர்பும் இல்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தில் தொலைபேசி வலையமைப்பு மற்றும் ஏனைய சாட்சியாளர்களின் வாக்கு மூலங்களை வைத்து விசாரித்த போது அவருக்கு தொடர்பில்லை என தெரியவந்ததாக சி.ஐ.டி. கூறியுள்ளது.

அதேபோல, ஐ.சி.சி.பி.ஆர்.சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்ன?. அரசியலமைப்பு ஊடாகவும், ' ஜனகோஷா' உள்ளிட்ட வழக்குத் தீர்ப்புகள் ஊடாகவும் உறுதி செய்யப்பட்ட, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பரிக்க இன்று இந்த ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் பயன்படுத்தப்படுகின்றமை கவலைக்குரியது. எனினும் உண்மை அதுவல்ல.

இங்கு பிரச்சினைக்குரியதாக காட்டப்படும் ஊடக சந்திப்பில் உண்மையில் அசாத் சாலி கூறியது என்ன? அவர் பிரிவினைவாத, வன்முறையை தூண்டும் எதனையும் பேசவில்லை. அவர் பயங்கரவாதம், அடிப்படைவாதத்துக்கு எதிரானவர். அவர் அனைவரும் ஒன்றினைந்து, ஒரே தேசியமாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனும் கருத்தையே அந்த ஊடக சந்திப்பில் வெளியிட்டார். இது குற்றமா?

எனவே அசாத் சாலிக்கு எதிராக எந்த சாட்சியங்களும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளுக்கு இல்லை. அவர் 100 வீதம் நிரபராதி. எனவே அவரை குற்றவியல் சட்டத்தின் 120 ஆம் அத்தியாயம் பிரகாரம் விடுவிக்கவும்.' என கோரினார்.

இதனையடுத்து அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா மீள பதில் வாதங்களை முன் வைத்தார். இதனையடுத்து கொழும்பு பிரதான நீதிவான் தனது தீர்மானத்தை அறிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் அவர் இதனை அறிவித்தார்.

மன்றில் விடயங்களை தெளிவுபடுத்திய நீதிவான், உணர்வுகளை மையபப்படுத்தி நடவடிக்கை எடுக்கும் போது இதனை விட மிக அவதானம் தேவை என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த விடயத்தில், ஊடக சந்திப்பினை செம்மைப்படுத்தி, அந்த கருத்தினை மாற்றி பிரச்சாரம் செய்த ஊடகங்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என நீதிவான் சுட்டிக்காட்டினார். இதனை அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேராவும் ஆமோதித்தார்.

கடந்த மார்ச் 09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின் சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, கடந்த மார்ச் 16ஆம் திகதி அசாத் சாலி CID யினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment