ஆர்.யசி
கொவிட் வைரஸ் பரவல் நிலைமையை கடக்கும் கட்டத்தில் நாம் இல்லை, இன்னும் நீண்ட தூர சவால்மிக்க பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. டிசம்பர் மாதம் இறுதி வரையில் மிகப்பெரிய சவாலுக்கு நாம் முகங்கொடுக்க நேரும் என இலங்கையில் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இலங்கையின் ஒட்டு மொத்த சனத் தொகையில் 70 தொடக்கம் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி ஏற்றினால் மட்டுமே பாதுகாப்பை உணர முடியும் எனவும் தெரிவித்தனர்.
நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்தும் அடுத்த கட்ட நிலைமைகள் குறித்தும் நிபுணர்களின் அவதானிப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை கூறினார்.
இது குறித்து கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட பேராசிரியர் மனோஜ் வீரசிங்ஹ கூறுகையில், இலங்கையை பொறுத்த வரையில் கொவிட் வைரஸ் பரவலை சமாளிக்கும் முறையான வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மிகச்சிறந்த ஒன்றாகும். ஆனால் அதனை துரிதப்படுத்த வேண்டும். இப்போது வரையில் நாட்டின் சனத் தொகையில் 30 வீதத்திற்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
நாட்டை திறக்க முன்னர் நாட்டின் மொத்த சனத் தொகையில் 70-80 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றினால் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து விடுபட முடியும்.
ஆனால் இலங்கை இன்னமும் அவ்வாறான சூழல் ஒன்றுக்கு இன்னும் தயாரில்லை. நவம்பர் மாதம் இறுதி அல்லது டிசம்பர் மாதம் இறுதிக்குள் குறைந்தது 60 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசி ஏற்றினால் மட்டுமே நிலைமைகளை கையாள முடியும். இல்லையேல் நாடு திறக்கப்பட்டால் மீண்டும் முடக்க நிலைக்கு தள்ளப்படுவோம்.
அதேபோல் கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை இப்பொது முடிவுக்கு வரப்போகும் ஒரு விடயமல்ல. இப்போது நாம் சகலரும் கொவிட் பரவளின் நடுப்பகுதியில் உள்ளோம். இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகமாகும். அதற்குள் மீண்டும் கொவிட் கொத்தணிகள் உருவாகும். மரணங்கள் பதிவாகும். தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே கொவிட் மரணங்களை தடுக்கவோ அல்லது குறைக்கவோ விரைவாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment