எம்.மனோசித்ரா
நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமை கடந்த இரு வாரங்களாக நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகின்ற மரணங்களின் எண்ணிக்கையின் மூலம் தெளிவாக தென்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தில் மாத்திரம் 4,805 மரணங்கள் பதிவாகியுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் கொவிட் மரணங்கள் தொடர்பான வாராந்த பகுப்பாய்வு அறிக்கை நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பதிவான மரணங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையின் அடிப்படையில் குறித்த ஒரு வாரத்தில் 1,386 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது இனங்காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கையில் 3.51 சதவீதமாகும்.
அந்த அறிக்கையின் படி இதுவரையில் மேல் மாகாணத்தில் மரண வீதம் அதிகமாகக் காணப்படுகின்றமை, கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாக இருக்கின்றமை, அதே போன்று 60 வயதுக்கு மேற்பட்டோராகக் காணப்படுகின்றமை மற்றும் இலங்கையில் உருவான 3 கொவிட் அலைகளிலும் 9 வயதுக்கு குறைவான 16 சிறுவர்கள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 53.4 % மரணம்
குறித்த பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் மேல் மாகாணத்திலேயே மரண வீதம் அதிகமாகவுள்ளமை மற்றும் வடக்கு மாகாணத்தில் மரண வீதம் மிகக்குறைவாகக் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய மேல் மாகாணத்தில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4466 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நூற்றுக்கு 53.4 சதவீதமாகும்.
இதே போன்று மத்திய மாகாணத்தில் 948 மரணங்களும் (11.3%), சப்ரகமுவ மாகாணத்தில் 668 மரணங்களும் (8.0 %), தென் மாகாணத்தில் 642 மரணங்களும் (7.7%), வடமேல் மாகாணத்தில் 569 மரணங்களும் (6.8%), கிழக்கில் 335 மரணங்களும் (4.0%), ஊவா மாகாணத்தில் 267 மரணங்களும் (3.2%), வடமத்திய மாகாணத்தில் 254 மரணங்களும் (3.0%) மற்றும் வடக்கில் 222 மரணங்களும் (2.7%) பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் 57 வீதமானோர் ஆண்கள்
ஆகஸ்ட் 27 ஆம் திகதி வரை பதிவான 8,371 மொத்த கொவிட் மரணங்களில் 57 சதவீதமானோர் ஆண்கள் என்றும் 43 சதவீதமானோர் பெண்கள் என்றும் தொற்று நோயியல் பிரிவின் பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் 4,792 ஆண்களும், 3,579 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 84 பேர் அதாவது ஒரு சதவீதமானோர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்களில் 37 பெண்களும், 47 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதே போன்று 1,873 பேர் (22.4 சதவீதமானோர்) 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்களில் 1,169 ஆண்களும், 7,04 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
எனினும் 60 வயதுக்கு மேற்பட்டோரின் மரண எண்ணிக்கை 6,414 ஆகும். இது நூற்றுக்கு 76.6 சதவீதமாகும். இவர்களில் 3,576 ஆண்களும், 2,838 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
மேற்கூறப்பட்ட வயதெல்லைக்குள் 30 வயதுக்கு உட்பட்டோரில் 0 - 9 வயதுக்கு இடைப்பட்ட 16 சிறுவர்களும் (0.2 சதவீதம்), 10 - 19 வயதுக்கு இடைப்பட்ட 14 பேரும் கொவிட் தொற்றாள் உயிரிழந்துள்ளதாக குறித்த பகுப்பாய்வு அறிக்கையின் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று பதிவான மரணங்கள்
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை 204 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 109 ஆண்களும் 95 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 149 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9604 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இதேவேளை நேற்றையதினம் 3,627 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 447,757 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 378,168 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 59,985 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment