இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பலஸ்தீன கைதிகளில் நால்வர் பிடிபட்டனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 11, 2021

இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பலஸ்தீன கைதிகளில் நால்வர் பிடிபட்டனர்

இஸ்ரேல் சிறை ஒன்றில் இருந்து இந்த வார தொடக்கத்தில் தப்பிய ஆறு பலஸ்தீனர்களில் நான்கு பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் சனிக்கிழமை அதிகாலை கார் நிறுத்தம் ஒன்றில் பதுங்கி இருந்த போது பிடிக்கப்பட்டனர் என்றும் மற்ற இருவர் வெள்ளிக்கிழமை அன்று நாசரேத் நகரின் அருகே பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது இஸ்ரேல் காவல்துறை.

மேற்குக் கரையில் உள்ள நகரான ஜெனின் எனும் நகரிலுள் அல்-அக்சா தியாகிகள் படையின் முன்னாள் தளபதி சக்காரியா ஜூபெய்தியும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். மீதமுள்ள மூவர் 'இஸ்லாமிய ஜிகாத்' எனும் அமைப்பினர் ஆவர்.

கடந்த திங்களன்று இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள கில்போ சிறைச்சாலையில் இருந்து ஆறு பேர் தப்பிய பின் அவர்களுக்கான தேடுதல் வேட்டை தொடங்கியது.

இஸ்ரேலிய சிறை ஒன்றிலிருந்து பலஸ்தீன கைதிகள் இவ்வாறு தப்பிச் செல்வது கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை.

துருப்பிடித்த கரண்டி மூலம் பல மாதங்களாக தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிலைக்கு கீழே சுரங்கம் ஒன்றைத் தோண்டி அவர்கள் தப்பியதாக நம்பப்படுகிறது.

தப்பிய சிறைக் கைதிகள் ஆறு பேரும் திங்களன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணி அளவில் சிறையிலிருந்து தப்பிச் செல்வதை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

ஆனால் உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்த பின்னர் அதிக 4:00 மணி அளவிலேயே அவர்கள் தப்பியது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இஸ்ரேலிய காவல்துறையின் பல பாதுகாப்பு குறைபாடுகளை இதற்கு காரணம் என்று அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.

சிறையின் ப்ளூ-ப்ரிண்ட் அதன் அலுவல்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது, மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரைச் சேர்ந்த அந்த ஆறு சிறைவாசிகளையும் ஒரே சிறையில் அடைத்து வைத்தது, வெளியில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் செல்பேசிகள் இயங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜாமர் கருவிகள் ஓன் செய்யப்படாமல் இருந்தது உள்ளிட்டவையே இவர்கள் சிறையில் இருந்து தப்புவதற்கு காரணமாக இருந்தன என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சிறைக்கு வெளியே இருக்கும் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்த காவலர், அருகில் தோண்டப்பட்டிருந்த சுரங்கம் வாயிலாக அவர்கள் தப்பிச் சென்ற நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
துருப்பிடித்த கரண்டி மூலம் தோண்டப்பட்ட சுரங்கம்
கில்போ சிறைச்சாலை இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அதி உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட சிறைச்சாலைகளில் ஒன்று.

இங்குள்ள பாதுகாப்பு வசதிகள் காரணமாக இந்த சிறைச்சாலை ஆங்கிலத்தில் 'தி சேஃப்' (The Safe) என்று அழைக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய நபர்கள் வயல்கள் வழியாக ஓடுவதை விவசாயிகள் பார்த்த பின்னரே சிறையில் இருந்து ஆறு பேரும் தப்பியது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணி அளவில் சிறை அதிகாரிகள் கைதிகளை எண்ணிய பொழுது ஆறு பேர் குறைவாக இருந்தனர். இதன் மூலம் சிறைக் கைதிகள் தப்பி ஓடியது உறுதிசெய்யப்பட்டது.

சிறையில் இருந்த ஒரு போஸ்டருக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துருப்பிடித்த கரண்டி ஒன்றைக் கொண்டு இவர்கள் இந்த சுரங்கத்தை தோண்டினர் என்று தி ஜெருசலம் போஸ்ட் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் சிறை அறையின் கழிப்பிடத்தில் தோண்டிய குழி, சிறையின் தளத்துக்கு கீழே இருந்த ஒரு வெற்று இடத்தை சென்றடைந்தது.

இந்தச் சிறையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்ட பொழுதே தரைக்கு அடியில் வெற்றிடம் வைத்து கட்டப்பட்டிருந்தது.

சிறையின் கட்டுமானத்தில் உள்ள கோளாறின் காரணமாகத்தான் இவர்களால் தப்பி ஓட முடிந்தது என்று இஸ்ரேலிய காவல்துறை கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தரைக்கு அடியில் இருந்த காலி இடத்தை தாங்கள் தோண்டிய குழி மூலம் சென்றடைந்த அந்த ஆறு பேரும் அங்கிருந்து ஒரு சுரங்கத்தை தோண்டி சிறையின் சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள ஒரு சாலையில் வரை தோண்டி அதன் மூலம் தப்பியுள்ளனர்.
தப்பியவர்கள் யார்? அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?
தப்பியவர்களில் ஒருவரான சக்காரியா ஜூபெய்தி மேற்குக் கரையில் உள்ள நகரான ஜெனி எனும் நகரிலுள் அல்-அக்சா தியாகிகள் படையின் முன்னாள் தளபதியாவர்.

மீதமுள்ள ஐந்து இஸ்லாமிய ஜிகாத் உறுப்பினர்களில் நால்வர் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் ஐந்தாவது நபர் குற்றச்சாட்டு எதுவும் இல்லாமல் தடுப்பு ஆணை ஒன்றின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட சக்காரியா ஜூபெய்தி 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment