எம்.மனோசித்ரா
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுகள் காணாமல் போயுள்ள விவகாரத்தில் சுகாதார அமைச்சும், இராஜாங்க அமைச்சும் நாடகத்தையே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இதனுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்று சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுகள் காணாமல் போயுள்ள விவகாரத்தில் சுகாதார அமைச்சும், இராஜாங்க அமைச்சும் நாடகத்தையே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்துடன் அரசாங்கமோ அல்லது சுகாதார அமைச்சோ தொடர்புபட்டிருக்கும் என்று நாம் எண்ணவில்லை. ஆனால் தொடர்புபட்டவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது.
குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று கண்காணித்துள்ளமையின் மூலம் மூலம் இது தெளிவாகிறது.
இது தவறை மூடி மறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியாகும். ஏன் தவறை மறைக்க முற்படுகின்றனர்? இது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கொவிட் தொடர்பான தரவுகளில் எவ்வித சிக்கலும் இல்லை என்று கூறுகின்றனர். ஏனைய தரவுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட போதிலும், கொவிட் தரவுகள் மாத்திரம் டிஜிட்டல் முறைமைக்கு உட்படுத்தப்படாமைக்கான காரணம் என்ன? இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment