(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போதுள்ளதைப் போன்று இறுக்கமற்ற முடக்கம் தொடர்ந்தும் காணப்படுமாயின் கொவிட் கட்டுப்படுத்தலில் சிறந்த பிரதிபலனைப் பெற இன்னும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இறுக்கமான முடக்கத்தின் மூலம் 10 நாட்களில் பெற்றிருக்க வேண்டிய பிரதி பலனையே ஒரு மாதத்தின் பின்னர் தற்போது பெற்றுள்ளோம் என்று சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒரேயொரு முடக்கத்தின் மூலம் கட்டுப்படுத்திருக்கக் கூடிய கொவிட் பரவலை ஐந்து சந்தர்ப்பங்களில் அமுல்படுத்தப்பட்ட முடக்கங்களினால் கூட கட்டுப்படுத்த முடியாமலுள்ளது.
உலகில் அதிக சந்தர்ப்பங்களில் முடக்கத்திற்கு சென்ற ஒரேயொரு நாடு இலங்கை என்றும், முடக்கத்தின் போது அதிகளவு போக்கு வரத்துக்கள் இடம்பெறும் ஒரேயொரு நாடும் இலங்கை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் டெல்டா பரவலே காணப்படுகிறது என்று நாம் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கூறியதையே தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இனியாவது பிறழ்வுகளை கண்டறிவதற்கான பரிசோதனைகளை சுகாதார அமைச்சு அதிகரிக்க வேண்டும். ஆனால் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு அஞ்சுகிறது என்றார்.
No comments:
Post a Comment